Thursday, February 19, 2009

திமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN

பிரணாப் முகர்ஜியின் அறிக்கை:தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விடக் கொடூரமானவை : வைகோ

http://sinnakuddy1.blogspot.com/2009/02/cnn-ibn.html


இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையானது ஈழத் தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விடக் கொடூரமானது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார்.



இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கும் தமிழ் இன மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தாய்த் தமிழகத்து மக்களின் உள்ளம் வேதனையில் துடித்துக் கொண்டு இருக்கையில், அந்த நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடும் அக்கிரமத்தை இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் சிங்கள கொடியோரின் ஊது குழலாக மாறி அறிக்கை தந்துள்ளார்.


மத்திய அரசின் மீது நான்காண்டு காலமாக நான் கொடுத்த குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு பிரணாப் முகர்ஜி தந்த அறிக்கையே ஒப்புதல் வாக்குமூலம் ஆகிவிட்டது.


உலகின் பல நாடுகளில் இருந்தும் பெற்றுள்ள ஆயுத பலத்தோடும், இந்தியா வழங்கி உள்ள மிக சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களின் உதவியோடும் சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்தின் பகுதிகளை ஆக்கிரமித்ததை ராஜபக்ச கெக்கலிகொட்டி கொக்கறிப்பதைப் போல பிரணாப் முகர்ஜியும் அதே மமதையோடும், கும்மாளம் போடும் குதூகலத்தோடும் வார்த்தைகளை வீசியுள்ளார்.


சிங்கள இராணுவம் பாரிய வெற்றிகளை பெற்றுவிட்டதாகவும். கிளிநொச்சி வீழ்ந்து விட்டதாகவும். ஆனையிறவைக் கைப்பற்றி விட்டதாகவும் முல்லைத்தீவுக்குள் நுழைந்துவிட்டதாகவும் தம்பட்டம் அடிக்கிறார் பிரணாப் முகர்ஜி.


வெறும் 150 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டு விட்டதாகவும், அதுவும் 70 ஆயிரம் தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக புலிகள் பிடித்து வைத்திருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறுகிறார்.


தமிழர்களை சிங்கள இராணுவம் துடிக்க துடிக்க கொல்வதை மூடி மறைத்து தமிழர்களை விடுதலைப் புலிகள் கொல்கிறார்கள் என்று மனச்சாட்சியை குழிதோண்டி புதைத்து விட்டு பிரணாப் முகர்ஜி மிக ஏளனமாகக் குற்றம் சாட்டுகிறார்.


முல்லைத்தீவு பகுதியில் ஏற்கனவே மூன்று லட்சம் தமிழர்கள் இருந்தனர். இப்போது வவுனியாவில் இருந்தும், கிளிநொச்சியிலிருந்தும் இரண்டு லட்சத்து இருபதாயிரம் மக்கள் முல்லைத்தீவுக்குள் வந்துள்ளனர்.


தமிழ் இனத்தையே அழிக்க தன் கொலைகார இராணுவத்தை ஏவி உள்ள ராஜபக்ச கூறியதை இந்திய வெளிவிவகார மந்திரி அப்படியே வழிமொழிகிறார். 35 ஆயிரம் தமிழர்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வந்துவிட்டார்களாம். சிறிலங்கா அரச தலைவர் சொன்னதை இந்தியாவின் மந்திரியும் சொல்கிறார்.


அது மட்டுமல்ல, போர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் எல்லாம் முடிந்து விடும் என்றும், அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து விடவேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


புலிகள் ஏற்கனவே தமிழ் இனத்திற்கு கேடுசெய்து விட்டார்களாம். 23 வருடங்களாக இலங்கைத் தீவில் இருந்த அமைதியின்மை ஒரு முடிவுக்கு வரப்போகிறதாம். அமைதி திரும்பப் போகிறதாம். அதன்பிறகு தமிழர்கள் பகுதிகளில் பொருளாதார மறுவாழ்வுக்கு இந்தியா உதவுமாம்.


தமிழீழத்தை சுடுகாடாக்கிவிட்டு அதற்குப்பின் இந்தியா அங்கே புதுவாழ்வு கொடுக்கப்போகிறதாம். நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது. புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டு வீசியதில் இராணுவத்தின் பீரங்கிகள் தாக்கியதில் மருத்துவமனையில் இருந்தவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டு விட்டார்கள்.


இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உள்ளனர். பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் வயது முதிர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர்.


இக்கொடூர தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், நெஞ்சைப் பிளக்கும் இந்தக் கொடிய துயரம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரணாப் முகர்ஜி தனது அறிக்கையில் சொல்லவில்லை. தமிழ்ப் பெண்கள் வவுனியா முகாமில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு, அந்த இராணுவ மிருகங்களால் கூட்டம் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டு அதன் பின் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


சிங்களக் காடையர்கள் பிடியிலிருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கூறியதை அறியும் போதே நம் அங்கம் எல்லாம் பதறுகிறது. இதயமே நொறுங்குகிறது.


ஆனால், இத்தனை கொடுமைகளையும், தமிழர் இன அழிப்புப் போரையும் சிங்கள அரசு செய்வதற்கு முழுக்க முழுக்க ஆயுதம் உதவி மட்டுமின்றி எல்லாவிதமான உதவிகளையும் இந்திய அரசு செய்து வருவதால்தான் ஒப்புக்கு கூட போர் நிறுத்தம் செய்ய சொல்ல இந்திய அரசு தயாராக இல்லை.


ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிடலாம் என்று கருதி நல உரிமைப் பேரவை என்று நாடகம் நடத்துகிறார். போரை நடத்துவதே இந்திய அரசு. அந்த இந்திய அரசு மூலம் ஐக்கிய நாடுகள் சபையை அணுகப் போகிறாராம்.


'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைப் பிளந்து வைகுண்டத்தை காட்டுவேன்' என்று மார்தட்டுவதைப் போல முதலமைச்சர் 'இல்லாத ஊருக்கு போகாத வழியைக் காட்டுகிறார்.


மொத்தத்தில் இந்திய அரசின் துரோகத்திற்கு முழுப் பங்காளி கலைஞர் கருணாநிதிதான் ஆவார். பிரணாப் முகர்ஜியின் அறிக்கை ஈழத்தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக்குண்டுகளை விட கொடுமையானது. தமிழ் மக்கள் அருந்தும் தண்ணீர் தடாகத்தில் கலக்கப்படுகின்ற ஆலகால விடம் ஆகும்.


இந்தத் துரோகத்திற்கு இனி எந்நாளும் மன்னிப்பு கிடையாது. தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் போடப்பட்ட கொடூர சதித்திட்டத்தை யார் வகுத்தார்களோ அந்த மாபாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. வினையை விதைத்து இருக்கிறார்கள். வினையை அறுப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments: