Saturday, August 15, 2009

ராசபக்சேவின் ஊதுகுழலாக கருணாநிதி

ராஜபக்சேவின் அட்டூழியங்களை மறைப்பதற்கு துணைசெய்யும் வகையில் செயற்படுகிறார் கலைஞர்: பழ.நெடுமாறன்

இலங்கையில் சமூக நிலை நிலவுகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கூறுவது கேலிக்குரியது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ’’இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்டு விட்ட பிறகும் கூட அந்த பிரச்சினையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும் என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்து இல்லாமல் நாள் தோறும் 200 பேருக்கு மேல் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதனை சுமூக நிலை என்று கருதுகிறாரா?

தமிழர்களுக்கு என்று தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றுவதைச் சுமூக நிலை என்று கருதுகிறாரா? எது சுமூக நிலை?

இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதனைக் கண்டித்து ஒரு வார்த்தை இதுவரை சொல்லாதவர் இப்போது அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று கூறுவதின் மூலம் ராசபக்சே நடத்தி வரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை செய்யும் வகையில் செயற்படுகிறார்.

கருணாநிதியின் இந்தத் துரோகத்தைத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.

நன்றி நக்கீரன்

0 Comments: