Tuesday, September 29, 2009

எல்லா இரவுகளும் விடிகின்றன

வையமெல்லாம் தமிழர்களின் காலடிகள் வைக்காத இடமில்லை
அங்கெல்லாம் சீரோடும் சிறப்போடும் அவர்கள் வாழவில்லை
சித்ரவதை கண்ணீர் தான் அவர்கள் சொத்து

பழங்கால தமிழர்கள் வாழ்வை இன்று
படித்தாலே நெஞ்சில் வீரம் பொங்கும்
வளமான அவர்கள் வாழ்வு போனது எங்கே??

வாட்டுகின்ற கொடுமைக்கு முடிவு எங்கே?
உலகத்து தமிழர் எல்லாம் ஒன்று பட்டால்
ஒரு நொடியில் தமிழர் வாழ்வு உயர்வு கொள்ளும்

இரவென்று ஒன்று இருந்தால் விடிவும் உண்டு
இனமானம் காப்பதுவே நம் கடமை
புயல் வீசி பின்னாலே அமைதி தோன்றும்
பொங்கி எழுங்கள் தமிழர்களே புவியை ஆள்வோம்


படைப்பு
கவிஞர். காட்டுக்கோட்டை கணேசன்

இருப்பாய் தமிழா நெருப்பாய்

--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

Monday, September 28, 2009

ஈழத்தமிழனின் வரலாறு, பிரபாகரன் பேசுகிறார்

கி.மு. 543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும் விஜயனும் அவனது அடங்காப் பிடாரிகளும் இலங்கையின் இன்றைய புத்தளத்தை அடுத்த தம்பப்பண்ணை துறையில் கரை சேர்ந்ததாக மகாவம்சம் பதிவு செய்கிறது.

அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமிழரெனக் கருதப்படும் அந்நிலத்து முற்குலமாம் நாகர் இன இளவரசி குவேனியைக் கூடியும், வடபகுதி மாதோட்ட தமிழ் குறுநில மன்னனோடு நட்பு தேடியும், தமிழகத்து பாண்டிய மன்னர்களோடு அயலுறவு அமைத்தும் இலங்கை மன்னனாக தன்னை முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம் ஆட்சி புரிந்ததாய் கதை உண்டு.

விஜயன் இலங்கைக்கு அகதியாய் வந்தபோது சிங்களம் என்றொரு இனம் அங்கிருக்கவில்லை. ஆனால் தமிழரின் மூதாதையர் இருந்தனர். உண்மையில் "சிங்களம்' என்பதே மொழி, இனம், பண்பாடு சார்ந்த சொல் அல்ல. சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை. அக் காலத்தில் கடலோடி வாணிபம் செய்தோர் அத் தீவுப் பகுதியை அதிகம் தேடிப் போனது இக் கறுவாப்பட்டைக் காகத்தான். கறு வாப்பட்டை அதிகம் கிடைத்த தால் அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபமெனப் பட்டது.

விஜயனுக்குப் பின் பன்னிரண் டாம் அரசனாய் அசேலன் ஆண்ட காலத்தில், கி.மு.205-வாக்கில் தமிழகம் தொண்டை நாட்டினின்று ஏலேலன் என்ற இளவரசன் பெரும் படையுடன் திரிகோண மலையிறங்கி, அனுராதபுரம் சென்று அசேலனை வென்று மொத்த இலங்கைக்கும் தன்னை அரசனாய் அறிவித்தான். நடுநிலை தவறா நீதி, பொறை, அருள், ஆண்மை, அறிவுடன் இலங்கைத் தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த ஏலேலன்தான் எல்லாளன் என்று பொதுவாக அறியப்படுகிறவன்.

உண்மையில் முல்லைத்தீவு கடற்புறத்தே நின்றுகொண்டு இளைய தளபதியர்களிடம் போராட்டத்தை ஒப்படைத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் போராட்ட அடையாளமாய் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்மன்னன் ஏலேலனை நிறுத்தவில்லை யென்பதும், மாறாக வெள்ளையராட்சிக்கெதிராய் கலகம் செய்து, துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வீரமரணம் தழுவிய வன்னி நில மன்னன் பண்டாரக வன்னியனை போராட்ட ஒளி விளக்காய் காட்டினார் என்பதும் மிக முக்கியமான குறியீடுகள்.

ஏலேலன் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்ப் பேரரசன். பண்டாரக வன்னியனோ பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய மனிதன். பிரபாகரன் ஒருபோதும் சிங்கள மக்களை அடிமை கொள்ள வேண்டுமென்றோ இலங்கையை ஆள வேண்டுமென்றோ ஆசித்தவரல்ல. ஆண்டாண்டு காலமாய் தமிழர் வாழ்ந்த அந்நிலப்பரப்பில் தானும் தன் மக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, உண்டு களித்து இன்புற்று தமிழ் பேசி வாழ வேண்டுமென்று துடித்த ஓர் நீதிமான். பேராசைகள், அகண்ட கனவுகள் இல்லாதிருந்த மாமனிதர்.

வரலாறுதான் மனிதர்களை விடுவிக்கும். ஒருநாள் வரும். "எங்கள் நாட்டின் ஒன்றுபட்ட தன்மையை காத்த மாமனிதனே' என்று பிரபாகரனை சிங்கள வரலாறு கொண்டாடும். ஏனென்றால் என் மக்கள், என் நிலம், என் மொழி என நின்று போராடினானேயன்றி அவன் சிங்கள இனத்தையும் அவர்தம் நிலத்தையும் வீழ்த்த நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா என ஏதேனும் ஓர் உலக சக்தியிடம் சரண டைந்து பக்குவமாய் இலங்கையை துண்டாடியிருக்கலாம். குறைந்தபட்சம் ஈவிரக்கமின்றி பல்லாயிரம் தமிழ் மக்களை கொன்றழித்த ராஜபக்சே கொடியவர்களைப் போல் இவரும் சிங்கள மக்களை கொன்றிருக்கலாம். அவ்வாறு பிரபாகரன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் நீதிமான். ஆதலால்தான் மீண்டும் சொல்கிறேன், இலங்கையின் ஒன்றுபட்ட தன்மையினையும், இறையாண்மையினையும் பாதுகாத்தது வேலுப்பிள்ளை பிரபாகரன்தானேயன்றி சந்திரிகாக்களும், ராஜபக்சேக்களுமல்ல. தனது மக்களுக்கான சுயநிர்ணய உரிமைப் போரில் சிங்கள மக்களை வேறெந்த உலக சக்தியிடமும் விற்பனை செய்ய பிரபாகரன் நினைக்க வில்லை, விரும்பவில்லை. எத்துணை பெரிய மனிதன். பண்டாரக வன்னியனும் அப்படியான ஒரு மனிதன்தான்.

அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.

வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ""ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை'' என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டாரக வன்னியன்.

முல்லைத்தீவில் நின்று பிரபாகரன் பண்டாரகவன்னியனின் வரலாற்றுத் தோளுரசி யதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டாரகவன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர் களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான ராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டாரக வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது. என்னைப் பொறுத்தவரை இதுதான் அந்தச் செய்தி:

""போராளிகளே, தமிழ் மக்களே! எல்லாம் முடிந்துவிட்டதுபோல் இன்று தோன்றலாம். ஆனால் காலம் நிற்பதில்லை. வரலாறு மீண்டு வரும். இதே முல்லைத்தீவு புதிய சமர்களைக் காணும். தமிழன், பண்டாரகவன்னியனைப்போல மீண்டும் இந்நிலத்தில் பழி தீர்த்து நீதி பெறுவான்.''

உண்மையில் களத்தின் கடைசி கட்ட உண்மைகளை வெளிநாடொன்றில் நின்று கொண்டு தொலைபேசி வழிக்கூறிய அப் போராளிகளிடம் நான் விடவிரும்பா நம்பிக்கையுடன் கேட்டேன்.

""உங்களைப்போல் ஆங்காங்கு உயிர் தப்பியிருக்கும் போராளிகளால் மீண்டும் முல்லைத்தீவைக் கைப்பற்ற முடியுமா?'' என்று. அதற்கு அப்போராளி சொன்ன பதில் வியப்பாயிருந்தது. ஒரு முறையல்ல, பலமுறை படபடவெனச் சொன்னார். ""முல்லைத்தீவிலிருந்து சிங்கள ஆமிக்காரனை அடித்து விரட்டுவது சின்ன விஷயம் ஃபாதர். ஆகிலும் சின்ன விஷயம் ஃபாதர். அடுத்த மாசமே வேண்டுமென்டாலும் நடத்தலாம். ஆனால் அதற்கு இந்தியாவின்ற உதவி வேண்டும். இந்தியாவின்ற உதவியின்றி அது சாத்தியமில்லை. சரியான கஷ்டம்.'' இந்தியா ஒரு நாள் மாறும், இந்தியாவின் மாற்றத்தை தமிழகம் ஒருநாள் நடத்திக்காட்டும் என்ற நம்பிக்கையோடுதான் உணர்வாளர் களாகிய நாம் எல்லோரும் இயங் கிக்கொண்டிருக்கின்றோம். அதே உணர்வோடுதான் பிரபாகரன் இளைய தளபதியர்களுக்கு கூறிய தாய் சொல்லப்படுவதையும் பதிவு செய்கிறேன்.

இதோ பிரபாகரன் பேசுகிறார்...

""இப்ப இங்கெ நிற்கிற நீங்களென்டல்ல... இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என்ற சொந்த பிள்ளையாத்தான் வளர்த் தேன். பல்லாயிரம் போராளிகளை இந்த விடுதலைக்கு நாம் ஈகம் செய்தோம். அதைவிட பெரிய நம் மக்கள் செய்த தியாகங்கள்... எதையும் நாம் மறக்க முடியாது. அந்த சகலபேரது நினைவுகளின்ட புனிதச் சுமையை உங்கட தோளிலதான் நான் நம்பிக்கையோட வைக்கிறேன். உயிரைக் கொடுக்க அச்சமில்லை என்ற நம் தியாகமும் உறுதியும்தான் போராட்டத்தை வளர்த்தது. அதே உறுதியோடு முன் செல்லுங்கள். வரலாறு நமக்காக மீண்டும் வரும்.

இருநூறு வருஷங்களுக்கு முன்னம் பண்டாரகவன்னியன் இதே வன்னி நிலத்தில் விடுதலைப்போர் புரிந்தார். இதே முல்லைத்தீவில் வெள்ளைக்காரன்ட கோட்டையை தகர்த்தார். ஆனால் துரோகி காக்கை வன்னியனால் காட்டிக் கொடுக் கப்பட்டு கற்சிலைமடு வில் காவியமானார். அன்று தரையில் விழுந்த பண்டாரகவன்னியனின் வாள் மண்மூடி, கூர் மழுங்கி, துருப்பிடித்து இனிமேல் பயன்படுத்த முடியாது எனுமளவிற்கு ஆகிக்கிடந்தது. தமிழருக் கான அந்த வாளை இருநூறு ஆண்டுகளாய் ஒருவரும் தொடவுமில்லை. ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை.

துருப்பிடித்து கூர்மழுங்கிக் கிடந்த பண்டாரக வன்னியனின் வாளை இருநூறு ஆண்டுகளுக்குப் பின்- முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் துணிவுடன் கையிலெடுத்தது. இலட்சிய உறுதி, இடைவிடா பயிற்சி, அர்ப்பணம், நினைத்துப் பார்க்க முடியாத ஈகங்களால் அந்த வாளை பட்டை தீட்டி, மேலும் மேலும் கூர்செய்து பளபளக்கும் போர்வாளாக நமது இயக்கம் அதை உயர்த்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே அந்தப் போர்வாள். உறையில் கிடக்கவில்லை, தரையில் விழவுமில்லை. தமிழருக்கான அந்த வாளை, உயரே தூக்கிப் பிடித்தபடிதான் இன்றும் நாம் களமாடுகிறோம். இன்றல்ல, என்றென்றும், உலகம் முடியும்வரை உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்குமான போர்வாளாக இதனை நான் தருகிறேன். இந்த வாள் இனி தரையில் விழக்கூடாது. கூர் மழுங்கித் துருப்பிடித்துவிடக்கூடாது. அந்தப் புனித கடமையை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன்.

இதே முல்லைத்தீவில் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களின் கோட்டையை முற்றுகையிட்டுத் தகர்த்த பண்டாரகவன்னியனின் வரலாறு, நாம் இதே மண்ணில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடத்திய வரலாறு மீண்டும் வரும். தினையாண் குருவிகளைப்போல் அமைதியான உழைப்பும், அக்னிக் குஞ்சுகளைப்போல் அகத்தே நெருப்பும் சுமந்து தணிந்து போகாத விடுதலை தாகத்துடன் இயங்கினீர்களென்றால் புலிகளின் படை மீண்டும் முல்லைத்தீவில் தரையிறங்கும். நான் உங்களோடுதான் இருக்கிறேன். புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்


நன்றி நக்கீரன்

Sunday, September 27, 2009

தமிழர்களின் முகாம் வாழ்க்கை : சர்வதேச ஊடகங்களும் புலம்பெயர் தமிழர்களின் கடமையும்

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் மோதல் இடம்பெற்ற சமயம் மனித உரிமைகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த சர்வதேச ஊடகங்கள் இன்று வன்னியில் முகாம்களில் தொடராக எதிர்நோக்கிவரும் பெரும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து வாய்மூடிமௌனியாக இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியில் சிங்கள படையினர் தமிழர் பகுதிக்குள் அத்துமீறி ஊடுறுவியபோது தம் மக்களை பாதுகாக்க தீரமுடன் போராடி தமது உடன்பிறப்புகளை தம்மால் முடிந்தவரை பாதுகாத்துபோராடிய வீரமறவர்களை விமர்சித்த இந்த ஊடகங்கள் இன்று தமது நாட்டு மக்களையே கொடுமைப்படுத்தும் நிலையை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியதே.


அண்மையில் முகாமுக்கு சென்று திரும்பிய நண்பர் ஒருவர் தெரிவித்த கருத்து தமிழினத்தையே வேதனைக்குள்ளாக்கியது.அதிலும் இதுபோன்ற செயல்கள் உள்நாட்டு,வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரியாமல்போனதன் தார்ப்பரியம் இதுவரை அறியப்படாதது வேதனைக்குரியதே.


அது என்னவெனில்,முகாம்களுக்குள் நுழையும் துணை ஆயுதக்குழுக்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாகவும் அதற்கு சிங்கள இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களை கேடயங்களாக பயன்படுத்துகின்றார்கள். தடுத்துவைத்துள்ளார்கள் என தினமும் செய்திகளை வெளியிட்டுவந்த உள்நாட்டு வெளிநாட்டு ஊடங்கள் இன்று அந்த மக்கள் ஒரு இனத்தின் அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் அடிமைப்படுத்தப்படுவது கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கின்றது.


முகாம்களில் உள்ள இளைஞர்களை தாங்கள் வெளியில் அழைத்துச்சென்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு,வேறு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தைகளை கூறி அவர்களுக்கு மூளைச்சலவை வழங்கப்பட்டு அவர்கள் முகாமுக்கு வெளியில் அழைத்துசெல்லப்படுகின்றனர்.


வெளியில் அழைத்துச்செல்லப்படும் இளைஞர்கள் துணைப்படை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு தமது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அவர்கள் வலுக்கட்டாயப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.


முகாம்களில் அடைக்கப்படும் இளைஞர்கள் வெளி தொடர்புகள் அற்ற நிலையில் சிங்கள படையினரின் பாதுகாப்பில் இந்த முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டோர் துணைப்படையினர் உள்ள பல பகுதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இவர்களின் இன்றை நிலை என்ன என்பது குறித்து தாம் அறிய துணைப்படையின் உயர்பீட தொடர்புகளை தொடர்புகொண்டபோதிலும் அது தொடர்பில் விபரம் பெறமுடியவில்லையென தெரிவித்தார்.


அது மட்டுமல்ல முகாம்களில் உள்ள இளம் பெண்களும் இந்த துணைப்படையினரால் கொண்டுசெல்லப்பட்டு கொழும்புபோன்ற இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாகவும் அது தொடர்பில் முகாமில் உள்ளோர் தம்மிடம் உரையாடியதாகவும் இது தொடர்பில் கதைக்க அவர்கள் கொண்டுள்ளதாகவும் முகாம் சென்று திரும்பிய இலங்கை அரசின் உயர்பதவியில் இருக்கும் அதிகாரியான நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.


இது முகாமில் உள்ள தமிழர்கள் கொண்டுள்ள அடக்கு நடவடிக்கையின் ஒரு பகுதியே. அந்த முகாமில் தமிழர்கள் கொண்டுள்ள நெருக்கடி நிலை வார்த்தையால் வர்ணிக்கமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர்,முகாம்களின் நிலை தொடர்பில் ஊடகங்கள் கொண்டுள்ள பார்வை குறித்தும் கவலை தெரிவித்தார்.


முட்கம்பி வேலிகளுக்குள் அடைப்பட்டு ஏங்கி நிற்கும் உங்களது உறவுகளுக்காக இனி நீங்கள் மேற்கொள்ளப்போகும் போராட்டமே அவர்களுக்கு கைகொடுக்கும்.


தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களை கேடயங்களாக பயன்படுத்துகின்றார்கள். தடுத்துவைத்துள்ளார்கள் என தினமும் செய்திகளை வெளியிட்டுவந்த உள்நாட்டு வெளிநாட்டு ஊடங்கள் இன்று அந்த மக்கள் ஒரு இனத்தின் அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் அடிமைப்படுத்தப்படுவது கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கின்றது.


இன்று சர்வதேச ரீதியில் “புலனாய்வு செய்தியில்”பிரபல்யம் பெற்றுவருகையில் இந்த முகாம் மக்கள் தொடர்பில் இந்த செய்திமுறைமை பின்பற்றப்படாமல் இருப்பது ஊடக நிறுவனங்கள் மீது தமிழர்களை சந்தேகம் கொள்ளச்செய்கின்றது.


இந்த வேளையில் நாம் புலம்பெயர் மக்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.நீங்கள் ஈழ தமிழர்களுக்காக உங்களது உறவுகளுக்காக அன்று நடத்தியபோராட்டங்களை விட இன்று முட்கம்பி வேலிகளுக்குள் அடைப்பட்டு ஏங்கி நிற்கும் உங்களது உறவுகளுக்காக இனி நீங்கள் மேற்கொள்ளப்போகும் போராட்டமே அவர்களுக்கு கைகொடுக்கும்.


இனியும் சர்வதேசத்தின் கண்கள் திறக்கவேண்டும் என்றால் உங்களது உறவுகளின் நிலை தொடர்பில் உங்களது நாட்டு அரசுகளுக்கு அறிவியுங்கள்.உங்களது உறவுகளை மீட்க்க நடவடிக்கையெடுக்குமாறு உரக்க குரல்கொடுங்கள்.ஜனநாயகம் தாங்களே என கூச்சலிட்டுவரும் அந்த நாடுகளின் போலிக்கௌரவமாவது உங்களது உறவுகளுக்கு கைகொடுக்கும்

ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு தமிழக அரசு தடை.

அமெரிக்க மனித உரிமை போராளியான மருத்துவர் எலின் ஷான்டர் அவர்களை அழைத்து தமிழகத்தில் சில கூட்டங்களில் பேசவைப்பதற்கு திட்டமிட்டோம். ஈழத் தமிழர் பிரச்சினையில் தீவிரமான ஈடுபாடு காட்டி வரும் அவர் பேசினால் மக்களிடையே நல்ல எழுச்சி ஏற்படும் என நம்பினோம். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த விசாவை இந்திய அரசு ரத்து செய்துவிட்டது. ஆனாலும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது பேச்சை தமிழக மக்களுக்கு போட்டுக் காட்ட முடிவு செய்தோம். அதற்கிணங்க மதுரைஇ கோவைஇ பெங்களூர்இ புதுடெல்லி ஆகிய நகரங்களில் சிறப்பாக கூட்டங்கள் நடைப்பெற்றன. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்கள்.

அத்தனை கூட்டங்களும் எத்தகைய வேண்டாத நிகழ்ச்சிகள் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றன.. செப்டம்பர் 29ந் தேதி சென்னையில் இந்தக் கூட்டம் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற இருந்தது. இக்கூட்டத்தில் பழ. நெடுமாறன்இ வைகோஇ தா.பாண்டியன்இ ம. நடராசன் ஆகியோர் பேச இருந்தனர். அதற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றம் சென்று முறையிட்டோம். உயர்நீதிமன்ற ஆணையின்படி காவல்துறை அனுமதி வழங்கிற்று. வேண்டா வெறுப்புடன் அனுமதி வழங்கிய காவல்துறை கூட்டம் நடைபெற இருந்த மண்டபத்தின் உரிமையாளரை மிரட்டி மண்டபம் கொடுக்க விடாதபடி செய்துவிட்டது. எனவே மீண்டும் உயர்நீதிமன்றத்தில் காவல் துறையின் தகாதப் போக்குக் குறித்து முறையிட்டுள்ளோம். உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு இந்தக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் எனவே ௨௬ல் நடைபெற இருந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது.

தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்குரலை ஒடுக்க முயலும் முதலமைச்சர் கருணாநிதியின் ஏதேச்சதிகாரப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

போலி கம்யுனிஸ்டுகளைப் போலவே போலிப் புரட்சியாளர்கள் வேடமிடும் ம.க.இ.க.

“ஏகலைவன்” மற்றும் “சர்வதேசியவாதிகள்” ஆகிய இருவரும் எமது முந்தையக் கட்டுரைக்கு எதிர்வினையாக இரு கட்டுரைகள் எழுதியிருக்கின்றனர். இது போன்ற ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் தாம் இவர்களை மேலும் அம்பலப்படுத்த மறைமுகமாக உதவுகின்றன என்பதால் இதனை மனமுவந்து வரவேற்போம். இதற்காக அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுமாக!

அடிப்படையற்ற அவதூறுகளுடன் கூடிய வசைகளை நாம் பொழிந்து விட்டோம் என்று ம.க.இ.க.வின் ஏகலைவன் குறைபட்டு கொள்கிறார். இதுவரை ம.க.இ.க. எழுதாத நாகரீகமற்ற வசைகளையும், அவதூறுகளையும் விடவா நாம் அதிகமாக எழுப்பிவிட்டோம்? 1976 இல் தொடங்கி இன்று வரை ம.க.இ.க. கும்பலின் “புரட்சிகர” விமர்சன பாணியே இது தானே! இவர்களது அரசியல் பாதையை உன்னித்துப் பார்த்தால் இது நன்கு விளங்கும் அன்றோ! இதோ ம.க.இ.க.வின் அரசியல் தத்துவப் பாசறையில் பயின்ற பிரச்சார பீரங்கி “சூப்பர்லிங்ஸ்”(Superlinks) கூறியிருக்கிறார் பாருங்கள். “மூஞ்சி மொகரக்கட்டைய விலாசத்தோட காட்டிடுங்க” என்று இவர்கள் கூறினால், நாம் எந்த அமைப்பு என்று கேட்பதாக அர்த்தமாம்.. புரி்ந்து கொள்ளுங்கள்... என்னே இவர்களது புரட்சிகர நாகரீகம்..! இந்தத் தவறை சுட்டிக் காட்டுவதால் எனக்கு “இலக்கிய ஆசான்” பட்டம் சூட்டி வெடித்திருக்கும் தோழர் ஏகலைவன், “சூப்பர்லிங்க்” செய்யும் இந்த “புதிய கலாச்சார” சேட்டை நடவடிக்கைகளை மெளனமாகத் தானும் அங்கீகரிக்கிறார். அடங்கேப்பா...! இவர்களது “புரட்சிகர” நடவடிக்கைகள் நம்மை பயங்கொள்ளவே வைக்கின்றன.

இந்தியக் கம்யுனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளை போலி கம்யுனிஸ்டுகள் என்று தாம் ம.க.இ.க.வினர் அழைக்கின்றனர். இதன் சாரத்தில், இவர்களெல்லாம் போலிகள் என்றும் தாங்கள் தான் உண்மையான கம்யுனிஸ்டுகள் என்றும் ம.க.இ.க. தம்மை பறைசாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறெனில், தம் கட்டுரையின் தலைப்பில் “போலித் தமிழ்த் தேசிய அரசியல்” என்று ஏகலைவன் எழுதியிருப்பதால், ம.க.இ.க. “உண்மையான தமிழ்த் தேசிய அரசியல்” என்ற ஒன்று இருப்பதை ஏற்றுக் கொள்கின்றதா? என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. தமிழ் உணர்வு, தமிழ்த் தேசியம் என்று கேள்விப்பட்டாலே இனவாதம், குறுந்தேசிய வெறி என்று குதறித் தீர்க்கும் ம.க.இ.க., நாளைக்கு நாங்கள் தான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளிகள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொண்டாலும் நாம் ஆச்சர்யங்கொள்ளத் தேவையில்லை. இது அவர்களுக்கு கைவந்த கலை. ஒருவேளை, இக்கேள்வியிலிருந்து தப்பிப்பதற்காக, “தேசியம்” என்பதே கற்பிதம், முதலாளிகளின் கண்டுபிடிப்பு அதனால் நாங்கள் சர்வதேசியத்தைத் தவிர வேறு எந்த தேசியத்தையும் ஏற்கவே மாட்டோம்” என்று இவர்கள் வாதிட்டாலும் வாதிடுவார்கள். அதே நேரத்தில், மறைமுகமாக, இந்தியத் தேசியத்திற்கும் வால் பிடிப்பார்கள்.

சரி, அவரது வாதத்தையே எடுத்துக் கொள்வோம். அதில், தமிழ்த் தேசிய அரசியல் என்பதே ஏகாதிபத்தியங்களின் எடுபிடி அரசியல் என்று தத்துவ மழை பொழிந்திருக்கிறார், ஏகலைவன். ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற சந்தையாக, ஏற்ற கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஏக “இந்தியத் தேசிய அரசியல்” தான் ஏகாதிபத்தியங்களுக்கு ஏதுவான அரசியல் களமே தவிர, தமிழ்த் தேசியம் அல்ல. தமிழ்த் தேசியம் தன் பிறப்பிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் களமாக பரிணமித்திருக்கிறது. உலகமயம் வேக வேகமாக அழித்து வருகின்ற தேசிய இன அடையாளங்களை உயர்த்திப் பிடித்து, அத்தேசிய இனங்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையை அடைவதற்காக தமக்கான விடுதலைப் போரை தொடங்கினால், அது ஏகாதிபத்தியங்களின் எடுபிடி அரசியல் என்றாகுமா? தமிழ் இனம் இந்தியத் தேசிய ஆதிக்கத்திற்குள் தான் கிடக்க வேண்டும் என்று எண்ணுகின்றது ஏகாதிபத்தியம். இவ்வாறு ஏகாதிபத்திய சக்திகள் தானே முன்னின்று எதிர்க்கின்ற, “தமிழ்த் தேசியம்” என்ற கோட்பாட்டை, ஏகாதிபத்தியத்திற்கு நன்மை பயக்கிறது என்று கூச்சலிட்டு, ஏகாதிபத்திய சக்திகளுக்கே பாடமெடுக்கிறார், ஏகலைவன்.

“இந்தியத் தேசிய அரசியல்” தான் ஏகாதிபத்தியத்தை “கதிகலக்கும்” அரசியல் என்று ஏகலைவன் கருதுவாரானால், அந்தப் பிழை அவரிலிருந்து உதித்ததில்லை. அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் பிறப்பிலிருந்தே அது உதித்துள்ளது. புரட்சிகர சொல்லாடல்கள், வாய்ச்சவடால் பேச்சுகள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சார இதழ்கள், கீழைக்காற்று என்ற புத்தக வெளியீட்டகம் என மக்கள் கலை இலக்கியக் கழகம் என்று சொல்லப்படுகின்ற ம.க.இ.க.வின் ஒருமுகம் தான் தற்பொழுது வெளியுலகில் பலருக்கும் தெரிந்திருக்கின்றது. இந்த அமைப்பிற்கு பின்னாலிருந்து இயக்கும் ஒரு “அகில இந்தியக்” கட்சி உள்ளது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அக்கட்சியின் பெயர், “இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட் - லெனினிஸ்ட்) - மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்பதாகும். ஆங்கிலத்தில் "CPI (ML)(SOC) State Organizing Commitee, Tamilnadu" - (சி.பி.ஐ.-எம்.எல்.-எஸ்.ஓ.சி.)என்பார்கள். அந்தக் கட்சியின் ஒரு மக்கள் திரள் அமைப்புத் தான், ம.க.இ.க. , பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., வி.வி.மு., பெ.வி.மு., உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம். இன்றும் கூட எஸ்.ஓ.சி. கட்சி தடை செய்யப்பட்ட ஒர் அமைப்பல்ல. தடை செய்யும் அளவிற்கு இதுவரை அவர்கள் ஒரு துரும்பும் செய்ததுமில்லை. ஆனால், அந்தக் கட்சி தலைமறைவுக் கட்சி என்பது போல பிலிம் காட்டுவது நகைப்புக்குரிய இவர்களது “புரட்சிகர” “ரகசிய” நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

“மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்று இருப்பதால், “மாநில அமைப்புக் கிமிட்டி, கேரளம்”, “மாநில அமைப்புக் கிமிட்டி, ஆந்திரம்” என்று பல கிளைகளைக் கொண்ட ஓர் “அகில இந்திய”க் கட்சி தான் இதுவோ என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. அப்படி எண்ணினால், நாம் முட்டாள்களே ஆவோம். அவ்வாறு நாம் எண்ண வேண்டும் என்பதற்காகவே, இக்கட்சியின் தலைமை ஓர் “அகில இந்திய”க் கட்சி போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும் படியாக, பீலிம் காட்டும் நோக்கத்திலேயே இப்பெயரை நன்கு திட்டமிட்டு வைத்திருக்கின்றனர் போலும். இல்லையெனில், “மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்று பெயரை வைத்துக் கொண்டு மற்ற “மாநிலங்களில்” கிளையோ, அமைப்போ, உறவோ கொள்ளாமலும், அதற்கான நடவடிக்கைகளில் கூட இறங்காமலும் இருப்பது ஒன்றே இவர்களது பெயர் பித்தலாட்டத்திற்கு சான்றளிக்கும். தம் கட்சிப் பெயரில் உள்ள “இந்திய” என்ற வார்த்தை தான் ம.க.இ.க.வின் அரசியல் எது என்பதனை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. தமது கட்சிப் பெயரில் கூட தமிழ்நாடு இந்தியத்தின் ஓர் அடிமை மாநிலமே என்று உணர்த்துமாறு “மாநில அமைப்புக் கமிட்டி, தமிழ்நாடு” என்றே வைத்துள்ள இவர்கள் தாம் தமிழ்நாட்டிற்கு உண்மையாகவே போராடும் புரட்சியாளர்களாம். நம்புங்கள். நாம் நம்பித் தான் தீர வேண்டும். ம.க.இ.க. அறைகூவல் விடுக்கிறது.

ம.க.இ.க. சார்ந்திருக்கும் நாடு என்பது ”இந்தியத் தாய்த்திருநாடு”. ம.க.இ.க.வின் தேசியம் என்பது ”இந்தியத் தேசியம்” என்பது இவை மூலம் நமக்குப் புலனாகிறது. இருந்த போதும், காசுமீர், மணிப்புர், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வேண்டுமெனவும் முழக்கமிடுவது தான் ம.க.இ.க.வினரின் ஸ்டைல். ஒருவேளை புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட்ட பின்னர், இவர்கள் கூறுவது படி அனைத்து மாநிலங்களும் பிரிந்து போக வேண்டுமென முடிவெடுத்துவிட்டால், ”இந்தி”யப் புரட்சியை இதயத்தில் வைத்திருக்கும் எஸ்.ஓ.சி. கும்பல், அந்த இந்தியமே தகர்ந்து போவதற்கு அனுமதிக்குமா? அனுமதிக்கவே அனுமதிக்காது. கம்யுனிசத்தின் பெயரால் இன்றைக்கு சீனா எப்படி திபெத்தை அடக்கி ஒடுக்கி வருகின்றதோ, அதே கதி தான் நாளை இவர்கள் சுயநிர்ணய உரிமை வழங்கப்போவதாக பட்டியலிடும் அனைத்து மாநிலங்களின் கதியும். இவ்வாறு, ”இந்திய” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு அவர்களை பின்னின்று இயக்கும் ”அகில இந்திய”க் கட்சி, எந்த நாட்டில் புரட்சி செய்யப் போராடுகின்றது? எந்த நிலப்பரப்பில் புரட்சி செய்யப் போராடுகின்றது? எந்த நில எல்லைக்குள்ளான பகுதிகளை புரட்சி செய்து கைப்பற்றப் போகின்றது? என்று திட்டமிடாமல், யார் எதிரிகள், யார் நண்பர்கள் என வெளிப்படையாகவும் வரையறுக்காமல் ”அரைகுறை” திட்டத்தைக் கூட வகுக்க வக்கில்லாத, இந்த ”இந்திய” கும்பல் தான், தமிழ்த் தேசியப் புரட்சியை பார்த்து கிண்டலடிக்கிறது.

“சமூகத்தில் நிலவுகின்ற மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளை, அடையாளங்களை மிகைப்படுத்தி ஒரு கலாச்சாரமாகப் பராமரிப்பதன் மூலமாக வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்று ஏகாதிபத்தியம் நம்புகிறது; ” என்றும் அக்கட்டுரையில் எழுதியிருக்கிறார், ஏகலைவன். வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் தான் ஏகாதிபத்தியம் மதம், சாதி, இனம் போன்ற அடையாளங்களை மிகைப்படுத்திக் காட்டுகின்றதாம்.

ஈழத்தமிழினம் அழிவுக்குள்ளாகி வந்த சூழலில் அனைத்துத் தரப்பு மக்களும் தமிழகத்தில் “நாம் தமிழர், அங்கே அழிக்கப்பட்டு வருவது நமது இனம்” என்ற விரிந்த பார்வையில் களமிறங்கி போராடினர் என்று கூறினோம். இது இந்தியத் தேசிய வெறியர்களுக்கு மட்டுமல்ல, ம.க.இ.க.விற்கும் அவ்வாறே அதிர்ச்சியையும் வெறுப்யையும் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகின்றது. ஈழத்தமிழினத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டு மக்கள் நடத்தியப் போராட்டத்தை பார்த்து நாம் கனவு காண்கிறோமாம், “சர்வதேசியவாதி”யின் புலம்புல்கள் இதனை உணர்த்துகின்றன.

ஆரிய பார்ப்பனியமே தமிழ் மக்களை சாதி ரீதியாக கூறு போட்டு பிளவுபடுத்தியது. தமிழ்த்தேசியர்கள், ஆரியப் பார்ப்பனியத்தை தம் முதன்மை எதிரியாகக் கணக்கிட்டு போராட வேண்டுமென நாம் சொல்கிறோம். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும், சாதி இழிவுகளைத் தாங்கிக் கொண்டு ஆதிக்கச் சாதிகளின் கீழே அடிமைப்பட்டே கிடக்க வேண்டுமென எந்தத் தமிழ்த் தேசியவாதி எழுதினார்? பேசினார்? இதற்கு ம.க.இ.க. முகாமில் பதில் கிடைக்காது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்கச் சாதிகளின் திமிர்த்தனத்தை எதிர்த்துப் போராடும் அதே வேளையில், சாதி வேற்றுமைகளைக் கடந்து தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டுமென்றே, தமிழ்நாட்டு தமிழ் உணர்வாளர்கள் விரும்புகின்றனர். உளவுத்துறை தான் முத்துராமலிங்கன் என்ற சாதி வெறி நாயைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவிவிட்டதா என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார், “சர்வதேசியவாதி”. இக்கேள்விக்கு எதிராக தோழர் ஏகலைவன் கூற்றுப்படி, “ஏகாதிபத்தியம் தான் வர்க்க அடையாளத்தை மறைக்க சாதி வேற்றுமையை மிகைப்படுத்திக்” காட்டியதா என்று நான் கேள்வி எழுப்பலாமா? தோழர் ஏகலைவன் கூற்றுப்படி, இங்கு நிலவும் சாதி, மத, இன வேறுபாடுகள் அனைத்திற்கும் ஒரே காரணம் ஏகாதிபத்தியம், ஏகாதிபத்தியம் மட்டுமே என எடுத்துக் கொள்ளலாமா? வர்க்க அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகத் தான் ஏகாதிபத்தியம் இன அடையாளத்தை மிகைப்படுத்தி ஈழத்தில் தமிழினத்தின் மீது சிங்கள இனவெறி அரசை விட்டு அடக்குமுறையை ஏவியதா? வர்க்க அடையாளம தெரியக்கூடாதென்றக் காரணத்தினால் தான் ஏகாதிபத்தியம், இந்தியாவில் தீண்டாமை சாதி ஒடுக்குமுறையை மிகைப்படுத்தி பராமரித்தா?

இவற்றை நாம் எழுப்பவில்லை, ஏகாதிபத்தியத்திற்குத் தான் வர்க்க அடையாளத்தை மறைக்க வேண்டியத் தேவை இருக்கிறது என எழுதியிருக்கும் ஏகலைவனின் வரிகள் தாம் எம்மை இவ்வாறு எழுத வைத்திருக்கின்றது. “சர்வதேசியவாதி” இதனை தோழர் ஏகலைவனிடமே கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு நாம் தடையல்ல..

தமிழ்த் தேசியர்களின் நிலைப்பாடு என்பது வெளிப்படையானது. ஆரியப் பார்ப்பனியமே தமிழினத்தின் முதல் பகையாக வரலாறெங்கும் விளங்கி வருகின்றது. இந்த ஆரியப் பார்ப்பனியத்தின் பாசிச சட்டவடிவு தான் ”இந்தியா” என்ற ஏகாதிபத்திய செயற்கைக் கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்புத் தகர்க்கப்பட்டு, அதில் சிறைபட்டிருக்கும் தமிழ் இனம், தமக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதற்கான கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை முன் வைக்கிறோம். ஆரிய இந்தியத்தைக் கருவறுக்கப் போராடும் அதே வேளையில், தமிழ் இனத்திற்குள் படிந்திருக்கும் சாதி வேற்றுமை அழுக்குகளை அப்புறப்படுத்த வேண்டுமே தவிர, சாதி வேற்றுமையை மட்டும் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தால், அது நம் கழுத்தைச் சுற்றி அமர்ந்திருக்கும் இந்தியத் தேசியக் கருநாகத்தி்ற்கே நம்மை காவு கொடுத்து விடும்.

சாதியக் கட்டமைப்புகளை தகர்க்கவும், அதன் சட்டவடிவான இந்தியத் தேசியத்தை உடைத்தெறியவும் கோரும் இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் தான் ஏகாதிபத்தியத்தின் எடுபிடி அரசியலாம், எழுதுகின்றார் ம.கஇ.க.வின் ஏகலைவன். காசுமீர் பிரச்சினையை முன்னிட்டு பாகிஸ்தான் உளவுத்துறை இந்தியாவை பிளவுபடுத்த சதி என்று இந்தியத் தேசியவாதிகள் வாந்தியெடுப்பதைப் போலவே, அவர்களது வளர்ப்புப் பிராணி ம.க.இ.க.வும் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, ”இந்திய”த்தையும் சர்வதேசியத்தையும் பிளவுபடுத்த சதி என்று அவ்வாறே அவர்களது சொந்த பாணியில் வாந்தி எடுக்கின்றனர்.

ஈழத்திற்கு எதிரான சிங்கள இனவெறி அரசின் போர் குறித்து ஒரு டுபாக்கூர் தீர்மானம் ஐ.நா. மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும். அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து விட்டதாக இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பட்டிலிட்ட ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகம், சோசலிசக் கியுபாவையும், நிகராகுவா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க இடதுசாரி நாடுகளையும் அப்பட்டியிலில் சேர்க்கவில்லை. ”பிற நாடுகள்” என்ற பெயரில் இவை அமுக்கப்பட்டு விட்டனவே, இது தான் உங்களது சர்வதேசியத்தின் லட்சணமா? நீங்கள் போற்றி பாதுகாக்கும் கியுபா, நிகரகுவா உள்ளிட்ட லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் இலங்கை இனவெறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டிக்கும் புரட்சிகர அரசியல் நேர்மை இல்லாத ம.க.இ.க., ”சர்வதேசியம“ பேசுகிறதாம். ஒருவேளை, இந்தப் போலிப் புரட்சியாளர்களின் அகராதியில் இந்த பித்தலாட்டத்திற்குப் பெயர் தான் சர்வதேசியம் என்பது போலும்.

தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள் கடந்த நாடாளுமன்றத் தோ்தலின் போது எடுத்த நிலைப்பாடுகள் மீது தோழர் ஏகலைவன் தம் கட்டுரையில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். மேலும் அக்கட்டுரையில், நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தோ்தலில் தமிழ்நாட்டுத் தமிழ் உணர்வாளர்கள் மேற்கொண்ட நிலைப்பாடுகள் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு ஆதவாகப் போய்விட்டதாம், ஒப்பாரி வைத்துள்ளார், ம.க.இ.க.வின் ஏகலைவன். அவரது விமர்சனங்களை ஆராய்வோம்.

ஈழத்தில் தற்பொழுது நடந்து முடிக்கப்பட்டிருக்கும், இனவெறிப் போரை சிங்கள இனவெறி அரசைக் கொண்டு திட்டமிட்டும், முழு பலத்துடனும் நடத்தியது இந்திய அரசே என்பது தான் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் அனைவரும் கொண்ட ஒரே நிலைப்பாடு. இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனால் தான், இந்தியாவின் துரோக முகத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், யார் இந்தப் போரை தலைமையேற்று நடத்துகின்றனரோ அந்த அரசை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அந்த அரசின் பெயரைச் சொல்லி “போரை நடத்துவது நீங்கள் தான் எனவே போரை நிறுத்து!” என்று பொருள்படும் விதமாக ”இந்திய அரசே! போரை நிறுத்து!” என்ற முழக்கம் தமிழ் உணர்வாளர்களால் முன் வைக்கப்பட்டது. இந்த முழக்கம் வெகு மக்களைச் சென்றடையும் பொழுது இந்திய அரசு இப்போருக்கு பின்னணியாக இருப்பது அம்பலமாகியது.

இவ்வாறு செய்யாமல், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்றும் ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்றும் முழக்கமிடுவது என்பது, ”போரை சிங்கள அரசு தான் நடத்துகின்றது, இந்திய அரசுக்கு இதில் சம்பந்தமே இல்லை” என்று பறைசாற்றுவதற்கு ஒப்பாகும். இம்முழக்கம், ”இப்போரைப் பற்றி இந்தியாவிற்கு ஒன்றுமே தெரியாது, இலங்கை அரசு தான் போரை நடத்துகிறது, நாம் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைத் தான் பாமர மக்களிடம் எழுப்பும். இதைத் தான் இந்தியத் தேசிய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. இந்த உளவியலைக் கட்டியமைக்கத் தான் இந்திய உளவுத்துறை கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தது. போரை தலைமையேற்று நடத்தும் இந்திய அரசின் ”நற்பெயருக்கு” களங்கம் வந்துவிடக் கூடாதென்ற காரணத்தினால் தான், பார்ப்பன இந்தியத் தேசியத்தின் பாதந்தாங்கிகள், திட்டமிட்டு ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்றும் ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்றும் முழக்கங்களை ஏந்தி நின்றனர்.

இந்திய அரசிற்கு தலைமையேற்று நடத்தும் பார்பபன பனியாக்களின் கட்சியான காங்கிரஸ் கட்சியும், அந்தக் கட்சியை விழுந்து விடாமல் தூக்கிப் பிடித்துப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் ”கருணா” கருணாநிதியும் இம்முழக்கத்தை முன்வைத்தே தம் போராட்டங்களை நடததினர். இதனால், தம்மை காத்துக் கொண்டிருக்கும், ”இந்தியத் தேசியத்தை” பாதுகாக்கும் ”பெரும்பணி”யை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ”இலங்கை அரசே! போரை நிறுத்து!” என்று துரோக சக்திகள் ஒரே குரலில் முழக்கமிட்டனர். இதில் வினோதம், என்னவென்றால், ”நாங்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள்”, ”நாங்கள் தான் இந்தியத் தேசியத்தைத் திரைக் கிழிப்பவர்கள்”, ”தமிழ்த்தேசியர்கள் எல்லோரும் போலிகள்” என்று ஓலமிட்டனரோ அவர்களும் இதே குரலில் தான் முழக்கமிட்டனர் என்பது வேடிக்கையானது.

இதனை ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகம் இதழ் அண்மையில் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. ”இந்திய மேலாதிக்கத்திற்கு பலியான ஈழம்: வர்க்கப் பார்வையை மறுக்கும் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தின் பக்கம் 24, பத்தி 4இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுருக்கிறது பு.ஜ.

””சிங்கள பேரினவாத அரசே, ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்து” என்பதே சரியான கோரிக்கையாகும்”.

அதாவது, இந்திய அரசு போருக்கு தலைமையேற்றிருப்பதை மறைத்து விட்டு, தமிழ்நாட்டில் சிங்கள அரசை எதிரியாகக் காட்டும் விதமாக, ”சிங்கள அரசே! போரை நிறுத்து!” என்ற முழக்கத்தை நாம் எழுப்ப வேண்டுமாம் பாடம் எடுக்கிறது ம.க.இ.க. நாம் ஏற்கெனவே சொன்னது போல் சிங்கள அரசிடம் கோரிக்கை எழுப்புவது போல் எழுப்பி, இந்தியத்தின் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தும் முழக்கத்தை முனைமழுங்கச் செய்து, இந்தியத்தின் துரோகத்தை மறைமுகமாக மறைத்திடும் மேற்கண்ட துரோக முழக்கத்தை, தி.மு.க. எழுப்பலாம், காங்கிரஸ் எழுப்பலாம், ஆனால், ”எங்கள விட்டால் தமிழ்நாட்டில் வேறு புரட்சியாளர்களே கிடையாது” என்று அடித்து வாதாடும் ம.க.இ.க. கும்பல் எழுப்பலாமா?

”இந்திய அரசே! போரை நிறுத்து!” என்ற தமிழ்த் தேசிய ஆற்றல்கள் எழுப்பிய முழக்கத்தின் மூலம் இந்தியத்தின் முகத்திரைக் கிழிபடுவதை ம.க.இ.க. கும்பலால் ஏன் தாங்கிக் கொள்ள முடியவில்லை? இந்தியத்தின் துரோகத்தை அம்பலப்படுத்தும் இம்முழக்கம் வெகுமக்களை சென்றடைவதை ம.க.இ.க.வின் தலைமை ஏன் விரும்பவில்லை? இது தான் நீங்கள் இந்தியத் தேசியத்தை அம்பலப்படுத்தும், திரைகிழிக்கும் லட்சணமா? இந்திய அரசை எதிர்க்க தங்களுக்கு மட்டுமே வக்கிருப்பதாக எழுதும் ம.க.இ.க. இவ்வாறு செய்யலாமா? எதிர்ப்பது போல் எதிர்த்தும் பேசி விட்டு, மறைமுகமாக பார்ப்பனியத் தந்திரத்துடன் அதனை ஆதரிப்பது என்பது தான் ம.க.இ.க.விற்கு கைவந்த கலையாயிற்றே. பிறகு வேறன்ன செய்வார்கள் இவர்கள்? ம.க.இ.க.வின் பார்ப்பனிய நடைமுறைத் தந்திரத்தை மட்டுமே இதிலிருந்து புரிந்து கொண்டு நாம் எச்சரிக்கை பெற வேண்டியிருக்கிறது.

மேலும், தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் அனைவரும் ம.க.இ.க.வை போலவே தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டுமாம், ஏகலைவன் நமக்கு அறிவுரை கூறியிருக்கிறார். இதனை ஆராய்வோம்.

தேர்தல் தினத்திற்கான இடைவெளி குறைந்து வர வர, ஈழத்தில் தினம் தினம் செத்து விழும் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்று கொண்டிருந்தது. சிங்கள அரசு குண்டுகளை மூர்க்கத்தனமாக வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குண்டுகளின் விசை டில்லியில் இருந்தது. தமிழ் மக்களின் ஓலம் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நெஞ்சைப் பிழிந்தது. போரைத் தலைமையேற்று நடத்திய இந்திய அரசை ஆள்வது, வழிநடத்துவது காங்கிரஸ் கட்சியே என்பது வெளிப்படை. எனவே எந்த விலைக் கொடுத்தாவது அக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கி போரை நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. காங்கிரசின் போர் வெறிப் போக்கில், அக்கட்சியுடன் உறவு வைத்துள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடு உண்டு என்பதால், அதன் தோழமைக் கட்சிகளையும் நாம் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஈழத்தின் போர்க் குண்டுகளின் வேகமும் ஈழத்தமிழனின் அவலமும் நெஞ்சை அப்பிய நிலையில், காங்கிரஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நிர்பந்தம் மட்டுமே தமிழ் உணர்வாளர்களுக்கு அப்பொழுது எழுந்தது.

தமிழகத்தின் தேர்தல் கட்சிகள் அந்நேரத்தில் இரண்டு அணிகளாக பிளவுண்டிருந்தன. ஒன்று கருணாநிதி, காங்கிரஸ் பங்கேற்ற எதிரிகள் அணி. மற்றொன்று பார்ப்பன செயா, போலி கம்யுனிஸ்டுகள் உள்ளடக்கிய துரோகிகள் அணி. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நிலைமை இவ்வாறிருக்க நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளில் யாரையும் முழுமனதோடு ஆதரிக்க முடியாதென்பது தான் உண்மை. இவர்கள் அனைவரும் போலிகள் என்று அனைவருக்குமே தெரிந்துள்ளது. இச்சூழலில் காங்கிரஸை அதிகாரத்திலிருந்து விரட்டி போரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தை செயல்படுத்த, தேர்தலை புறக்கணித்தல் என்ற முடிவை கைகளில் எடுக்கலாமா? அது வெகு மக்களை சென்றடைவது சாத்தியம் தானா? இத்தேர்தல் புறக்கணிப்பால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விடுமா? என்ற ஐயங்கள் எழும்பின.

காங்கிரஸ் அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டவுடன், பார்ப்பன பா.ச.க.வோ அ.தி.மு.க.வோ அல்லது மற்ற கட்சிகளோ இந்திய அரசிற்கு தலைமையேற்றால், ”ஈழம் உடனே கிடைத்து விடும்” என்று தமிழ்நாட்டில் ஒருத்தரும் நினைக்கவில்லை. உணர்ச்சிவயப்பட்ட சிலர் மட்டுமே அவ்வாறு கருதிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில், தமிழகத் தமிழ் உணர்வாளர்களின் நோக்கம் வெளிப்படையானது, அது காங்கிரஸ் அணியினர் வீழ்த்தப்பட்டு, சிங்கள அரசுக்கு இந்திய அரசு கொடுத்து வரும் ஆதரவில் விரிசல் ஏற்பட்டு, உடனடி போர் நிறுத்தத்திற்கு வழி ஏற்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே நம்மை இயக்கிக்கொண்டிருந்தது. இது மட்டுமே தற்காலிகப் போர் நிறுத்தத்தை மட்டுமாவது சாதிக்கும் என்று நம்பிய தமிழ் உணர்வாளர்கள் தான் இங்கு அதிகம்.

மேலும், தேர்தல் குறித்து தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகளுள், பல்வேறு முரண்கள் இருந்தன. அய்யா நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், தேர்தல் புறக்கணிப்பை தன் கட்சித் திட்டத்தில் கொண்டிருந்தாலும் கூட, அவ்வப்போது சூழ்நிலை கருதி தேர்தலில் பங்கேற்காமல் ஏதேனும் ஒரு அணிக்கு பிரச்சாரம் செய்வதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ”பொடா” கொடுங்கோல் சட்டத்தை எதிர்ப்பதற்காக 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் பார்ப்பன செயாவிற்கு எதிராக த.தே.இ. தமிழகமெங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பெரியார் திராவிடர் கழகம் பெரியார் காலந்தொட்டே தேர்தல்களில் பங்கெடுப்பதில்லை. புறக்கணித்ததும் இல்லை. பெரியார் காலம் தொடங்கி தேர்தல் குறித்த பெ.தி.க.வின் பார்வை வெளிப்படையானது. தேர்தலில் பங்கெடுக்காமல், அவ்வப்போது சூழ்நிலைக் கருதி தோ்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவர் அவ்வளவே. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இந்திய அரசு நடத்தும் தேர்தல்களில் அடிமைச் சமூகமான தமிழ்ச் சமூகம் பங்கேற்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதால், தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தன. தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகளும் இவ்வாறே நிலையெடுத்தன.

தேர்தல் குறித்த இவ்வாறான பல்வேறு முரண்களைக் கொண்டாகவே தமிழ்த் தேசிய அமைப்புகள் இருந்தன. இச்சூழ்நிலையில், ஈழத்தில் நடந்த போரின் கொடூர முகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை கணக்கில் கொண்டு, எதிரிகள் அணி உடனடியாக அதிகாரத்திலிருந்து விரட்டப்பட வேண்டும் என்ற உளவியலே தமிழ்த் தேசிய இயக்கங்களையும் தமிழ்நாட்டு உணர்வாளர்களின் மனதிலும் மையம் கொண்டிருந்தது. இதற்காக காங்கிரஸ் அணியினரை குறிவைத்து ஆட்சியதிகாரத்திலிருந்து இறக்க வேண்டுமென முரண்களை மறந்து விட்டு தமிழ்த் தேசிய அமைப்புகள் ஒன்றுபட்டு பாடுபட்டன. இதில் என்ன தவறு இருந்தது?

ஒருவேளை, ஆட்சியதிகாரத்திலிருந்து காங்கிரஸ் கட்சியை உடனடியாக இறக்கப்பட வேண்டும் என்பதில் ம.க.இ.க.விற்கு உடன்பாடில்லாமல் கூட இருந்திருக்கலாம். அதனால் தான் போகாத ஊர் ஒன்றிற்கு வழி காட்டியது ம.க.இ.க.

இந்த அரசியல் சமூகச் சூழலில் தான், காங்கிரஸ் அணியினர் வீழ்த்தப்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற தமிழ் உணர்வாளர்கள் மனதில் எழுந்த ஒற்றை நோக்கத்தை சீர்குலைத்து, மழுங்கடிக்கும் விதமாக ”தேர்தல் புறக்கணிப்பே தீர்வு” என்று சாமியாடிக் கிளம்பியது ம.க.இ.க. ம.க.இ.க.வினர் தம் அமைப்பு தொடக்கத்திலிருந்து தேர்தல்களில் பங்கேற்பதில்லை. அதனை புறக்கணிக்கக் கோரிப் பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே, இத்தேர்தலையும், ஈழத்தை முன்வைத்துப் புறக்கணிக்கக் கோரினர். வெகுமக்கள் இதற்கு செவிசாய்க்க மாட்டார்கள் என்பது தெரிந்தும், மக்களின் உளவியல் தேர்தல் புறக்கணிப்புக்கு ஏற்றதாக இல்லை என்பது தெரிந்தாலும், தனது வழக்கத்தை மாற்றக் கூடாதென ”தேர்தல் புறக்கணிப்பு” அறைகூவல் விடுத்தது ம.க.இ.க. தொடர்ந்து இதையே அவர்கள் செய்து வருவதால், இத்தேர்தலை அவர்கள் புறக்கணித்ததில் யாருக்கும் வியப்பேதுமில்லை.

"இந்தத் தேர்தலில் வாக்களித்தால் இந்திய அரசின் துணையுடன் ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்புப் போருக்கு நாம் ஒப்புதல் கொடுத்தவர்கள் ஆவோம்" என்றது ம.கஇ.க. ஒருவேளை, வாக்களிக்காமல் நாம் அப்படியே இருந்து விட்டால் என்ன நடக்கும் என்று ம.க.இ.க. ஒரு போதும் எண்ணிப் பார்க்கவில்லை. ஈழத்தில் மக்கள் தினம் தினம் செத்து விழுவதைப் பற்றியோ, போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற உடனடி கடமையோ, அக்கறையோ அவர்களுக்கு கவலையில்லை. மாறாக, அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரண்டெழச் செய்வதுதான்” அவர்களது நோக்கமாக இருந்தது.

ஈழத்தில் செத்து விழும் பிணங்களைக் காட்டி பதவிப் பொறுக்குகின்றன, ஓட்டுக் கட்சிகள் என்று ஒப்பாரி வைத்த ம.க.இ.க., அவர்களை விட மிகக் கேவலமாக மார்க்சிய லெனினியத்தின் பெயரால் மோசடி செய்து கொண்டு, தங்கள் கட்சித் திட்டமான தேர்தல் புறக்கணிப்பை நிறைவேற்றிக் கொண்டு ஆள்பிடிக்க, இத்தேர்தலை பயன்படுத்துகிறோமே என்ற வெட்கம் சிறிதும் இன்றி செயல்பட்டது.

நாளுக்கு நாள் ஈழத்தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதால் வெளியேறும் இரத்தம் கடலை சிவப்பாகிக் கொண்டிருந்த நேரம் அது. அந்நிலையில், எப்பாடுபட்டாவது, எவ்விலை கொடுத்தாவது உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்பு, வேகம் மட்டும் தமிழக மக்கள் மனதிலும், தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும் குடி கொண்டிருந்தது என்பது ம.க.இ.க.வினருக்கு மட்டும் உறைக்காதது ஏன்?

“போர்” என்ற கொடிய மின்சார நாற்காலியில் அமர்த்தப்பட்டு ஈழத்தமிழனின் உயிர் போய்க் கொண்டிருக்கிறது. அந்நேரத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற விசையை, அதிகாரத்தில் அமர்ந்திருப்பதால், தம் வசம் வைத்திருந்தது இந்திய அரசின் ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சி. உடனடியாக அந்த விசை நிறுத்தப்பட, அதிகாரத்தை பிடுங்குவது தான் தீர்வு. அதை ஓரளவு சாத்தியத்தியப்படுத்துவதற்கான ஒரு வழியை இந்த போலி ஜனநாயகத் தேர்தல் ஏற்படுத்தியிருந்த நிலையில், அதை புறக்கணிக்கத் தான் வேண்டுமா என்று அறவழியில் கூட இவர்கள் சிந்திக்கவில்லை. மாறாக, அந்த அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உடனடி சக்தி நம்மிடம் இல்லை என்று தெரிந்தும் கூட, அந்த “போகாத ஊருக்கு போய்த் தான் தீருவேன்” என்று திட்டமிட்டு தன் அணியினரை வழிநடத்தியது, இந்தக் கூலிக்கும்பல்.

அனைத்துக் கட்சிகளும் மக்களுக்கு எதிரானவர்கள் தாம் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. எல்லோரும் ”கொள்ளை” அடிப்பவர்கள் தாம் என்று மக்களுக்கு நன்கு புரிந்திருக்கிறது. இருந்தாலும், மக்கள் ”ஓட்டுரிமை” மீதும், இந்த முதலாளித்துவ போலி சனநாயக உரிமை மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த உளவியலை, மக்களின் நம்பிக்கையை ஒரே நேரத்தில், ஒரேடியாக நாம் தகர்த்து விட முடியாது. அதற்கான சக்தி, புரட்சிகர ஆற்றல்களிடம் இல்லை. இச்சூழலில், அதனை தகர்க்கும் அளவிற்கு மக்கள் மனதில் தேர்தல் அரசியல் மீதான வலுவான எதிர் கருத்தியலும் ஆழமாக பதியப்படவில்லை.

மக்கள் மீது அரசின் மிக மூர்க்கத்தனமான பாசிச வெறி அடக்குமுறைகள் வேண்டுமானால், உடனடியாக மக்கள் மனதில் தேர்தல் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஓரளவு தகர்க்கச் செய்யும். ஆனால், தமிழகத்தில் யதார்த்த நிலைமை அப்படி அல்ல. இங்கு மக்கள் மீதான அரசின் ஒடுக்குமுறை என்பது எவ்வளவு கொரடூரமாக இருந்தாலும், வெகு மக்கள் அதனை உடனடியாக உள்வாங்கிக் கொண்டு உணரக் கூடிய நிலையில் இல்லை. ஓட்டுக்கு பணம், இலவச சைக்கிள், இலவச அரிசி, இலவச தொலைக்காட்சி என்று மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு தற்காலிக மருந்துகளை வழங்கி, ஆளும் வர்க்கம் மக்களை மயக்கி வைத்திருக்கின்றது. இந்நேரத்தில், அரசின் மீதான மக்களின் எதிர் உளவியலை, ஆளும் வர்க்கம் மென்மையான முறையில் சரி கட்டுக் கொண்டிருந்தது. அரசின் ஒடுக்குமுறையைக் கூர்மைப் படுத்தி, அதனை அம்பலப்படுத்தி மக்களுக்கு தலைமையேற்று நடத்தக்கூடிய தமிழ்த் தேசிய புரட்சிகர ஆற்றல்கள் தமிழகத்தில் வலுவுடனும் இல்லை. இச்சூழலில், ஈழத்தை முன்வைத்து தமிழகத்தில் ”தேர்தல் புறக்கணிப்பு” என்பது சாத்தியமானதாக இல்லை என்பது தானே யதார்த்தம். ”பணம் கொடுத்தால் வாக்களிப்போம்” என்ற சந்தர்ப்பவாத உளவியலே பெரும்பாலான மக்கள் மனதில் ஆளும் வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது தானே உண்மை. இதனை மெல்ல மெல்ல மக்களுக்குப் புரிய வைத்து, வென்றெடுத்து மக்களை அணிதிரட்ட வேண்டும் என்பதும் உண்மை தான். ஆனால், அதற்கு இதுவா தகுந்த நேரம்? இது தான் அதற்கேற்ற காலச்சூழலா? அதற்கேற்ப தமிழ் மக்களை அணிதிரட்டும் விதமாக நமக்கு சக்தி இருந்ததா? எதுவும் இல்லை.

ஒருவேளை, இச்சூழ்நிலையில் தமிழ்த் தேசிய சக்திகள் அனைத்தும் ம.க.இ.க. பாதையில் தேர்தல் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும்? எப்பொழுதும் போல் 60 சதவிகிதம் வாக்குப் பதிவாகியிருக்கும். ”தேர்தல் புறக்கணிப்பு” என்ற பெயரில் காங்கிரஸ் அணியினருக்கு எதிரான கோப அலை ”ஓட்டுகள்” அனைத்தும் ”புறக்கணிப்பு” என்ற பெயரில் சாக்கடையில் கலப்பது போல வீணாகியிருக்கும். இந்திய எதிர்ப்பு கோப அலைகள் ஓட்டுகளாக பரிணமித்து, ”தேர்தல் புறக்கணிப்பு” நீரோட்டத்தில் தணிந்து விட்டிருக்கும். எந்த எதிர்ப்புமின்றி காங்கிரஸ் எளிதாக பணநாயகம் கொண்டு வெற்றி பெற்றிருக்கும். ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏறிய திமிரில் போரின் வேகத்தை அதிகரித்து ஈழத்தமிழர்களை மேலும் அதிகமாக கொன்று குவித்திருக்கும். ”இந்த இனத்தை குண்டு வீசி அழித்தாலும் இவர்கள் நேரடியாக எம்மை எதிர்த்து போராட மாட்டார்கள்” என்ற ஆதிக்கத் திமிர் உளவியலை காங்கிரஸ் அணியினருக்கு மேலும் வலுப்படுத்தியிருக்கும். இவ்வாறான, இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகத் தான், ம.க.இ.க. விரும்புகின்றது போலும்.

ஈழத்தமிழனுக்காகப் போராடுகிறோம் என்று ஓலமிட்டுக் கொண்டு, சிங்கள இனவெறியர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக ம.க.இ.க. போன்றக் கும்பல்கள் தமிழகத்தில் இவ்வாறாக செயல்படுவதை எண்ணி தமிழனாக நாம் வெட்கப்படத்தான் வேண்டியிருக்கிறது. சிங்களர்களை ”பாட்டாளி”கள் என்ற பெயரில் ம.க.இ.க. கும்பல் வேண்டுமானால் பெருமையுடன் வாரி அணைத்துக் கொள்ளலாம். தேர்தலின் போது ம.க.இ.க.வினர் செய்த இந்த ”அரும்பணி”க்காக, சிங்களர்களும், ”பாட்டாளிகள்” என்று ம.க.இ.க.வினரை அழைத்து பரிசளித்து மகிழ்ந்து கொள்ளலாம்.

தேர்தல் புறக்கணிப்பு காங்கிரஸ் அணியை ஒன்றும் செய்து விட முடியாது என்ற நிலையில், காங்கிரஸ் அணியினரை வீழ்த்தும் நோக்கில் அதற்கு எதிரணியினரை ஆதரித்து தமிழகத் தமிழ் உணர்வாளர்கள் பரப்புரை மேற்கொண்டனர். பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் வெளிப்படையாக காங்கிரசுக்கு எதிர் அணியினரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டனர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெளிப்படையாக எக்கட்சியையும் ஆதரிக்காமல், ”காங்கிரசைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், தமிழின விரோதக் காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்காதீர்” என்று, காலச்சூழல் கருதி வெகுமக்களின் உளவியலுக்கேற்ப பிரச்சாரம் செய்தனர். பல்வேறு தனித்தமிழ் இயக்கங்களும், தமிழ்ச் சங்கங்களும், தமிழ் உணர்வாளர் மன்றங்களும் இவ்வாறே செயல்பட்டன. தமிழ்த் திரையுலகினரும் இவ்வகையில் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ”இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று திரையுலகில் வெளிப்படையான குரல்கள் எழும்பினாலும், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் அதனை கண்டித்தனர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து மட்டுமே பரப்புரை செய்ய வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்த் தேசிய அமைப்புகளின் இவ்வகை பரப்புரைகளால் தான் தமிழகத்தில் காங்கிரஸ் அணியினருக்கு ஓரளவாவது எதிர்ப்புகள் பதிவாயின. ஈழத்திற்கு துரோகமிழைத்த காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் தங்கபாலு, மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் தோற்றனர். காங்கிரஸ் அணியினருக்கு தமிழ்த் தேசிய ஆற்றல்களின், இந்தளவிலான எதிர்ப்பு கூட இருந்திருக்கக் கூடாது என்று தான் ம.க.இ.க. விரும்புகிறது, என்பதைத் தான் அதன் ”போகாத ஊருக்கு வழிகாட்டும்” - தேர்தல் புறக்கணிப்புப் பாதை நமக்கு உணர்த்துகிறது.

ஈழத்தின் இன அழிவைக் கருதித் தேர்தல் கட்சிகளுடன் தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்ட இந்த ”திடீர்” உறவு ”தேர்ந்து தெளிந்து திட்டமிட்டு” உருவாக்கப்பட்டதாம். ம.க.இ.க. வாய்க்கூசாமல் புளுகுகிறது. இதையும் நம்பிக் கேட்பவர்கள் ம.க.இ.க.வில் இன்னும் இருப்பதால், அவர்கள் இதுவும் சொல்வார்கள், இதற்கு மேலும் கூட சொல்வார்கள். ”என்ன இருந்தாலும், பார்ப்பன செயா போன்ற சக்திகளுடன் தமிழ் உணர்வாளர்கள் போயிருக்கக் கூடாது” என்றும் ம.க.இ.க.வினர் முதலைக் கண்ணீர் வடித்து, தம் அணிகளுக்கு பாடமும் எடுப்பார்கள். இதற்கொரு வரலாற்று உதாரணத்தை நாம் எடுத்தாள வேண்டியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மனியின் இட்லர் தலைமையில் பாசிச இனவெறி அணியொன்று உருவாகியது. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியும் ஜப்பானும் அதில் பங்கு கொண்டிருந்தனர். அவ்வணி உலக நாடுகளை பாசிச வெறியுடன் பிடிக்கத் தொடங்கி ரசியாவிற்கு அருகில் வந்து நின்றது. அந்நேரத்தில், இந்தப் பாசிச அணி உலகையே அச்சுறுத்தும் அணியாக இருந்தது. இந்தப் பாசிச அணியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அனைவர் மனதிலும் எழுந்தது. ரசிய அதிபர் ஸ்டாலின் இதற்காக திட்டமிட்டார். ரசியாவை மட்டுமின்றி உலகையும் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக ஒரு ”பாசிச எதிர்ப்புக் கூட்டணி”யை உருவாக்கினார். அதற்காக அவர் யாருடன் கைக்கோர்த்தார் தெரியுமா? அன்றைய உலக ஏகாதிபத்தியங்களாக விளங்கிய இங்கிலாந்துடனும், அமெரிக்காவுடனும்.

இந்த ”பாசிச எதிர்ப்புக் கூட்டணி”யை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாரசீக நாட்டின் டெக்ரான் நகரில் நவம்பர் 26 1943இல் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் ஆகியோரை ரசிய அதிபர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். திட்டமிட்டார். பாசிசத்தை வீழ்த்தினார்.

ஏகாதிபத்திய நாடுகளுடன் கைக்கோர்த்துவிட்டார் என்பதற்காக என்றைக்காவது, எந்த ம.க.இ.க.காரனாவது, ”இரும்பு மனிதர்” தோழர் ஸ்டாலினை ஏகாதிபத்தியக் கைக்கூலி என்று அழைத்திருப்பார்களா? ஓரளவு மார்க்சியம் தெரிந்தவர்கள் கூட ஸ்டாலினை இவ்வாறுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவேளை, மனுநீதிக் கண்ணாடியுடன் மார்க்சியத்தைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால், இவ்வாறு தெரிய வாய்ப்புண்டு. ம.க.இ.க.வினருக்கு எப்படியோ! ஒருவேளை, ம.க.இ.க.வினர் ஸ்டாலினை ”ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வைத்த சந்தர்ப்பவாதி” என்று இகழ்ந்துரைத்தால், அதைத் தமிழ்த் தேசியர்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஸ்டாலின் எவ்வாறு எதிரிகளான ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டணி வைத்தாரோ, அதே போன்று தான், இந்திய சிங்கள இனவெறிப் பாசிச சக்திகள் மேற்கொள்ளும் இனவெறிப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய சக்திகள், ஈழத்திற்கு காலத்திற்கேற்ப ஓரளவு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டுத் தேர்தல் கட்சிகளுடன் உறவு கொண்டன. ஸ்டாலின் மேற்கொண்டால் அது ”போர் உத்தி”, ஆனால் தமிழ்த் தேசியர்கள் மேற்கொண்டால் அது ”சந்தர்ப்பவாதமா”? ரசிய நாட்டைக் காக்க ஸ்டாலின் செய்தால் அது ”நடைமுறைத் தந்திரம்”, தமிழ் இனத்தை அழிவிலிருந்து காக்க தமிழ்த் தேசியர்கள் செய்தால் அது ”பிழைப்புவாதமா”? ம.க.இ.க.வே இது தான் ஒவ்வொருவருக்கும் தனித்தனி நீதி வழங்கும் உங்களது ”மனுநீதி”ப் பார்வையா?

புலிகளை மட்டும் எதிர்ப்பதாகவும், ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்பவர்களாகவும் நாம் ம.க.இ.க.வினரை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ம.க.இ.க.வினர் ஈழத்தமிழர் ஆதரவு நிலையிலும் என்றும் உறுதியுடன் இருந்ததில்லை. இந்தியம் எப்படி பார்ப்பனிய சூழ்ச்சியுடன் ஈழத்தைக் கையாள்கிறதோ அதே போலத்தான் இவர்களும் காலத்திற்கேற்ப ஈழத்தைக் கையாள்கின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டலாம்.

1997 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் முன் முயற்சியில் ஈழத்தமிழர் ஆதரவை வெளிப்படுத்த ஒர் முழு அடைப்பு நடத்தப்பட்டது. தமிழக மீனவர் படுகொலை, ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்டவற்றை மட்டுமே பிரதானப்படுத்தி நடந்த இம்முழு அடைப்புப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கையும் எழுப்பப்படவில்லை. ஆயினும், புதிய ஜனநாயகம் இம்முழு அடைப்பில் கலந்து கொள்ளாமல் முழு அடைப்பை கேவலமாகவும் சித்தரித்து எழுதியது. 1997 ஆம் ஆண்டு சூலை 01-15 இதழில் பு.ஜ. இவ்வாறு தலைப்பிட்டு எழுதியது, ”முழு அடைப்பு முழுத் தோல்வி”. இம்முழு அடைப்பு தோல்வி அடைந்து விட்டதால், தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் ஆதரவு சரிந்துவிட்டது என்றும் எழுதி ஈழத்தமிழர் ஆதரவு முழு அடைப்புப் போராட்டத்ததை புலிகள் ஆதரவு போராட்டம் என்பதாக சிங்கள அரசின் துணை அமைப்பு போலவே சித்தரித்து இழிவு படுத்தி எழுதியது பு.ஜ. அதே நேரத்தில், அம்முழு அடைப்பை அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க. ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க. மட்டும் ஆதரித்தது.

முழு அடைப்பில் கலந்து கொள்ளாத ம.க.இ.க. வின் பு.ஜ. பின்பு சில மாதங்கள் கழித்து கீழ்க்கண்டவாறு எழுதியது.

“ஏற்கெனவே ஈழப்பிரச்சினையிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட தி.மு.க. ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து நடந்த கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு மறுத்தது; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டிக்கக் கூட முதுகெலும்பின்றிக் கிடக்கிறது” - (புதிய ஜனநாயகம், செப்டம்பர் 1997 பக்கம் 9)

ஈழத்தமிழர் இனப்படுகொலையை கண்டித்து நடந்த கடையடைப்புப் போராட்டத்தில் ஆளும் திமுக கலந்து கொள்ளாததைக் கண்டித்து, அக்கட்சி முதுகெலும்பின்றிக் கிடக்கிறது என்று ஊளையிடுகின்றது பு.ஜ. அதே வேளையில், அப்போராட்டத்தில் ம.க.இ.க. ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கவுமில்லை. கண்டிக்கவுமில்லை. திமுக அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் கண்டிக்குமாம். ம.க.இ.க. கலந்து கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினால் கண் மூடிக்க் கொள்வதோடு இல்லாமல், அப்போராட்டத்தை கொச்சைப் படுத்தியும் அவமதித்தும் எழுதுமாம். ஒருவேளை பு.ஜ. கூறுவது போல் ம.க.இ.க.வும் முதுகெலும்பின்றி தான் கிடக்கிறதோ என்று தான் எண்ணத் தோண்டுகிறது. இது தான் இவர்களது புரட்சிகர ஒழுக்கமும் அரசியல் நடைமுறையும் போலும்.

பெரியார் பாணியில் ம.க.இ.க.வைப் பற்றிக் கூறினால், ஒரே வார்த்தையில் “வெங்காயம்!” என்று சொல்லாம். பார்ப்பதற்கு பெரிதாக மார்க்சியம், ஜனநாயகம், புரட்சி போன்ற பெருந்தோல்கள் போர்த்தப்பட்டு உள்ளே ஏதோ இருக்கிறது என்ற தோற்றத்தை அளிக்கும். ஆனால், உரித்துப் பார்த்தால் ஒன்றுமிருக்காது. அது தான் ம.க.இ.க...! த ஒன்லி “புரட்சியாளர்” ஆப் த வேர்ல்டு!...

- அதிரடியான் ( athiradiyaan@gmail.com )

நன்றி
http://www.keetru.com/index.php/2009-08-09-04-42-53/2009-08-09-08-06-45/405-2009-09-03-10-18-32.html

Saturday, September 26, 2009

காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலா பாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங். தன் தேசத்து மக்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொடியவனில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் 31 ஜுலை 1940 அன்று இங்கிலாந்து நாட்டில் தூக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார்.

இவரது எஞ்சிய உடல் பாகங்கள் கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்டு, 1974-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அரச மரியாதையுடன் அவரது பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மாவீரரைக் கவுரவப்படுத்தி 'காத்திருந்தேன்... கதை முடித்தேன்!' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் நாடு போற்றும் வீரர்கள் வரிசையில் வரிசைப்படுத்தியிருந்தது. உண்மையாகவே, அந்த தேசிய உணர்வாளனின் தியாகம் போற்றப்பட வேண்டியதுதான். உலக மக்களும் அறிந்து கொள்ள வேண்டியதுதான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஈழத் தமிழர்களான நாங்களும் இதய பூர்வமாக அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். இப்படியேதான் நாங்கள் எங்கள் நாட்டுப் படுகொலைகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்... இந்திய தேசத்தை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்கள் போலல்லாது நாங்கள் மலர்க்கொத்துக்கள் வழங்கி இந்திய அமைதிப்படையை வரவேற்ற காலம்... நம்பிக்கையோடு எம் தேசத்தின் அமைதிக் காற்றைச் சுவாசிக்கும் ஆவலில் குதூகலித்திருந்த காலம்... தமிழர்களைக் காப்பாற்ற என்ற கொட்டொலியுடன் 1987 இல் கால் பதித்த இந்திய அமைதிப்படையை நம்பி விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி காத்த காலம்...

தமிழீழ மண்ணில் கால் பதிக்கும்வரை அமைதிப் படையாகவே வந்த இந்தியப் படை தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதும், சுய ரூபம் காட்டியது. சிங்கள தேசத்தின் காவல் படையாக மாறிய இந்திய அமைதிப் படையின் துரோகத் தனத்தைக் கண்டு கொதித்த தமிழர்களை பொறுமை காக்க வைத்து திலீபன் அவர்களிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வைத்து, காந்திய தேசத்திடம் நீதி கோரி, காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். என்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று திலீபனால் ஆரம்பிக்கப்பட்ட தியாக வேள்வி இந்திய அரசால் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டது. உறுதி தளராத திலீபன் 26 செப்ரம்பர் 1987 சனிக்கிழமை காலை 10.48 மணிக்குத் தன் இறுதி மூச்சை எம் சுவாசத்தில் கலக்கவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.

எதிரியின் கொடுமையிலும் பார்க்க, துரோகியின் துரோகத்தின் வலி தமிழீழ மக்களின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. இதைத் தொடர்ந்தும் இந்தியத் துரோகத்திற்கு குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகள் பலியானதால் உருவான கொந்தளிப்பு இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் திரும்பியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படை ஆரம்பித்த நம்பிக்கைத் துரோகப் போர் யாழ். வைத்தியசாலையையும் விட்டு வைக்கவில்லை. யாழ். வைத்தியசாலைக்குள் புதுந்த இந்திய இராணுவம் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள், தாதிகள், நோயாளிகள் என்று யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து முன்னேறிய இந்திய இராணுவத்தின் கொலைக் கரங்களுக்கு சிறியவர், பெரியவர், இளைஞர், யுவதிகள், ஆண்கள், பெண்கள், வயோதிபர் என்ற வேறுபாடு தெரியவில்லை.

காந்தி தேசத்தின் படைகள் ஈழத் தமிழர்கள் சுமார் பத்தாயிரம் பேரைக் காவு கொண்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத இந்தியப் படை 31 மார்ச் 1990 அன்று அன்றைய சிறிலங்கா அதிபர் பிரேமதாசவால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. தமது உறவுகள் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, இந்தியத் துரோகங்களுக்கும் ஈழப் படுகொலைகளுக்கும் காரணமான இந்தியாவின் அந்த நாளைய பிரதமர் ராஜீவ் காந்தி அதே உத்தம் சிங் பாணியில் பலி கொள்ளப்பட்டார்.
அன்று துப்பாக்கியுடன் டயரை நெருங்க முடிந்த உத்தம் சிங் போல அந்த தமிழீழப் பெண்ணால் நெருங்க முடிந்திருந்தாலும் நிச்சயம் குறி தவறியிருக்கும் என்பதால், தன்னையே வெடிகுண்டாக்கித் தன் வீரசபதத்தை முடித்துக் கொண்டாள் என்று ஈழத் தமிழர்கள் அவரை மாவீரராக ஏற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

அன்று, உத்தம் சிங் எடுத்த முடிவைத்தான் பின்னர் தானு எடுத்தார். உத்தம் சிங் தேசிய வீரராக கவுரவிக்கப்பட்டது சரி என்றால், தானுவும் எமது மக்களால் தேசிய வீரங்கனையாகப் போற்றப்பட வேண்டியவர்தான். இந்தியா உத்தம் சிங்கிற்கு உரிய கவுரவம் வழங்க இங்கிலாந்து அரசு அனுமதித்தது போலவே, தமிழீழம் தானுவுக்கு உரிய கவுரவம் வழங்கப்போகும் காலத்தில் இந்தியாவும் அதற்கான அனுமதியை வழங்கவேண்டும்.


--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

இனத்துரோகிகளை பட்டியலிடுவோம் தக்க பதிலடி கொடுப்போம்

"ஒன்ற வந்தவன் தஞ்சம் கொடுத்தவனை வஞ்சம் செய்வது"
"வாழ இடம் கொடுத்த தமிழனின் வாழ்கையைப் பாழயடையைச் செய்வது"

நெஞ்சம் எரிகிறது, நாம் உண்மையை உணர வேண்டும், உணர்ந்ததை சொல்லவேண்டும்.
இருப்பினும் ஒரு சிலர் செயலுக்காக நாம் அணைவரையும் பகைக்கவேண்டாம் நம்மை பிரிக்கவேண்டாம்
தற்போது இனத்துரோகிகளை பட்டியலிடுவோம் தக்க பதிலடி கொடுப்போம்

௧. மு. கருணாநிதி
பச்சை துரோகி, ஒட்டு மொத்த துரோகி.. இவன் குலம் சீக்கிரம் ஒழியட்டும்..எம் இனத்தை அழித்தவனுக்கு நான் விடும் சாபம் இது..
இவன் கட்சி -> தி.மு.க / இவன் . காட்சி -> சன்-டிவி / கலைஞர்-டிவி தினகரன் / பத்திரிகை - தினகரன், குங்குமம்
இவை அனைத்தையும் புறக்கணிப்போம். இவன் டிவியை பார்க்காதீர்கள் / பத்திரிகையை வாங்காதீர்கள்.

௨. சோனியா காந்தி.
இந்த அம்மையாருக்கும், காந்திக்கும் எந்த உறவும் இல்லை. பிறந்து வளர்ந்ததெல்லாம் ஒரு arms-dealer குடும்பம். தெரிந்த ஒரே செயல் ஒன்றுக்கு பல்லாயிரத்தை பழி வாங்குவது. எந்த வகையில் எல்லாம் நாம் இந்த கட்சியை புறக்கணிக்க முடியுமோ, அந்த வகையில் சிறுவர், மாணவர் என்று அணைவருமே தொடர்ந்து நம் மக்களோடு உழைத்து முறியடிப்போம்.

௩. பார்பனிய கூட்டம். ( சுப்ரமணிய சுவாமி / சோ / ஹிந்து ராம்)
நன்றி கேட்ட நயவஞ்சகர்கள். நம்மோடு ஒன்றியவருக்கு வாழ்வுகொடுத்த நம்மையும், நம் இனத்தையும் அமுக்குவதிலும், அழிப்பதிலும் முன்னோடிகள்.
இவர்களது பத்திரிகைகள், கூட்டங்களை புறக்கணியுங்கள்.
இந்த மானம் கெட்டவர்கள் , நன்றி கெட்டவர்கள் குரல் ஒடுக்கப்படவேண்டும்.
சிங்கள அரசுடன் காசு வாங்கி பத்திரிக்கை வேசித் தொழில் செய்பவன் இந்த ராம்.

௪. சிங்கியடி கூட்டம்
- மன்மோகன் சிங்க்
- எம்.கே.நாராயணன்
- மேனன்


இது காசுக்காக/நாற்காலிக்காக எதையும் செய்யும் கூட்டம். இந்தக் கூட்டத்திற்கு நாம் தக்க சமயத்தில் பதிலடி கொடுக்க வேண்டும்.

இனிமேல் எவனும் தமிழனுக்கு துரோகம் செய்ய எண்ணும்போதே உடலும், உள்ளமும் நடுங்க வேண்டும்.

நன்றி,
அன்பன்
உ. சு. சுப்பு



--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

வீடியோவில் அம்பலமான படுபாதகம்... கருவறைக்குள் ஒரு காமுகன்!

நகரேஷு காஞ்சி' என்பார்கள். ஆன்மிகத்தின் ஆணிவேர் காலங்களைக் கடந்து அழுந்தப் பதிந்து கிடக்கும் பூமி இது. கோயில்களுக்கும், பக்திப் பெருக்கெடுக்கும் திருவிழாக்களுக்கும், மனதை வலுவாக்கும் நல்ல பல அறிஞர்களின் கருத்துக்களுக்கும் பஞ்சமில்லாத நகரம் காஞ்சிபுரம்!

விநோதமான ஒற்றுமையாக, பகுத்தறிவுச் சிந்தனை மூலம் விழிப்பு உணர்வு உண்டாக்கி, அதோடு அரசியலிலும் புதிய சாதனைகள் படைத்த அறிஞர் அண்ணா பிறந்த நகரமும் இதுவே!
ஆன்மிகத்தின் மீது நம்பிக்கையோ, நாட்டமோ இல்லாத வர்கள்கூட... கோயில் என்றால் மரியாதையோடு பார்த்துத் தாண்டிப் போகிற வழக்கம் இங்கே உண்டு. ஆத்திக அன்பர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
இங்கேதான், இங்கிருந்துதான் ஜூ.வி. ஆக்ஷன் செல் 044-42890005 எண்ணில்

அந்தக் குரல் வந்து பதிவாகி இருந்தது. ''என் பெயர் முக்கியமில்லை. ஆனால், என்னிடம் இருக்கும் ஒரு வீடியோ சி.டி. முக்கிய மானது. அதை ஜூ.வி. முகவரிக்கு தபாலில் அனுப்பி வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு, இந்த எண்ணுக்குக் கூப்பிடுங்கள். மிச்சத்தைச் சொல்கிறேன்...'' என்றது அந்தக் குரல்!

சொன்னபடியே அந்த சி.டி-யும் வந்தது. எத்தனையோ ஊழல் விவகாரங்கள் குறித்த, ஆவணம்போலத்தான் இதுவும் என்று எண்ணி அதை ஓடவிட்டோம். அந்த சி.டி. ஓட ஓட... நம் இதயம் நின்றுவிடும் போலானது! என்னவொரு பாதகம் அது..!
அது ஒரு கோயிலின் கருவறை என்பது புரிகிறது; கம்பீரமான கருவறையின் கதவுகள் பாதி திறந்தே கிடக்க, அந்தக் கதவுக்குப் பின்னால் உள்ள மறைவைக் குறிவைக்கிறது கேமரா. அந்தக் கருவறையில் பிரதானமாக தரிசனம் கொடுக்கும் சிவலிங்கத்துக்கும் முன்னால், படமெடுத்தாடும் நாக தெய்வத்தின் சிறிய விக்கிரகம். அதை அமைத்துள்ள கான்க்ரீட் திண்டின்மேல் அமர்ந் திருக்கிறார் அந்த மனிதர். கோயில் குருக்களுக்குரிய எல்லா லட்சணங்களையும் அவருடைய பின்புற தோற்றத்திலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.
சேலை உடுத்தியபடி இவரோடு காஷுவலாக நிற்கிறார், நடுத்தர வயதில் ஒரு பெண்மணி. சுவற்றை ஒட்டினாற்போல் நிற்கும் அந்தப் பெண்மணியை ஆலிங்கனம் செய்துகொண்டு... அப்பப்பா... இடம் - பொருள் - ஏவல் தெரியாமல், ஒரு மிருகமாகவே செயல்படும் அந்த மனிதரும் பெண்மணியும் துளிகூட அச்சமோ, கூச்சமோ, தெய்வகுத்தமோ பார்க்கிற வகையாகத் தெரியவில்லை.

இடையிடையே, கதவுக்கு வெளியே இடுப்பை மட்டும் வளைத்துப் பார்த்து, பக்தர்கள் யாராவது அர்ச் சனைக்கோ ஆராதனைக்கோ வருகிறார்களா என்று செக் பண்ணிக் கொள்கிறார் அந்த குருக்கள். பிறகு, தன் பாவத்தைத் தொடர்கிறார். மனதைக் கல்லாக்கிக்கொண்டு அதை தொடர்ந்து பார்த்தால், இறுதியில் இடுப்பு வேட்டி மடிப்பிலிருந்து ரூபாய் நோட்டுகளை உருவி அந்தப் பெண்மணிக்குக் கொடுத்து அனுப்பிவைப்பது வரையில் பதிவாகியிருக்கிறது!
சி.டி-யின் அடுத்ததொரு காட்சி... அடுத்த தொரு பெண். குங்குமம், விபூதி என மங்கலம் துலங்கக் காட்சி தரும் இந்தப் பெண்ணுக்கு வயது - இருபத்தைந்துக்குள் இருக்கும். கழுத்தில் தாலி மின்னுகிறது! இடம் - இதே கருவறையின் கதவு மறைப்புதான். முந்தைய காட்சி போலவே பட்டப்பகலில்தான் இதுவும் அரங்கேறுகிறது.

இந்தப் பெண்ணோடு இருந்த படியே எட்டிப் பார்க்கும் அர்ச்சகர், சட்டென்று ஷார்ப்பாகி... நகருகிறார். இளம்பெண்ணை சுவற்றோடு சுவறாக ஒட்டி நிறுத்திவிட்டு... கருவறைக்கு வெளியே காஷுவலாக செல்கிறார். வந்துவிட்ட பக்தர் களிடமிருந்து அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு, எந்தவித சலனமும் முகத்தில் காட்டாமல் சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்கிறார். மிகச் சுருக்கமாக தன் அர்ச்சனையை முடித்துவிட்டு, தீபாராதனைத் தட்டு சகிதம் மறுபடி வெளியே போகிறார் (பக்தர்களுக்கு கற்பூர ஜோதி காட்டுகிறார் என்றே யூகிக்க வேண்டியிருக்கிறது!). வந்த வர்கள் இறைவனிடம் தங்கள் வேண்டுதலைச் சொல்லிவிட்டுக் கிளம்பியதும், மறுபடி கதவை லேசாக சாத்தி வைத்து, அதன்பின்னால் கேமராவின் ஆளுகைக்குள் வந்து அந்த இளம்பெண்ணோடு ஐக்கியமாகிறார்!

மூன்றாம் காட்சி கோயிலில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அது ஒரு லாட்ஜ் அறையாகவே தெரிகிறது. தலைக்கு மேல் போர்ட்டபிள் டி.வி. ஓடிக்கொண்டிருக்க... இதே மனிதரும் முற்றிலும் புதியதொரு பெண்மணியும்! இறுதியில் அந்தப் பெண் மணிக்கும் பணம் அளிக்கப்படுகிறது... எந்த பக்தர், என்ன பிரார்த் தனையோடு இறைவனின் பெயரால் தீபாராதனைத் தட்டில் போட்ட பணமோ..?!

- இவை அனைத்துமே அந்த குருக்களின் சொந்த செல்போனில், வாகாக இடம் பார்த்து வைக்கப்பட்டு, அவருக்குத் தெரிந்தே பதிவாகியிருக்கிறது என்பது இந்தக் காட்சிகளைக் காணும்போதே உறுதியாகிறது. தவறான செய்கை, தவறான இடம்... அதை தாண்டி அதையெல்லாம் பதிவு செய்து வைத்துக்கொள்ளும் உச்சகட்ட வக்கிரம்!
இதுபோல் மொத்தம் ஆறு பெண்கள் தொடர்பான காட்சிகள் இந்த சி.டி-யில் இடம் பெற்றிருக்க... அதையெல்லாம் முழுதாகப் பார்ப்பதற்கு மனதில் திடமில்லாமல், சி.டி-யை அனுப்பி வைத்த வாசகரின் எண்ணுக்கே போன் போட்டோம்.
''உங்கள், பெயரும் அடையாளங்களும் ரகசியமாக வைக்கப்படும். சி.டி-யின் பின்னணியைச் சொல்லுங்கள்...'' என்றோம். அவர் சொன்னதெல்லாமே, ''இது என் கைக்கு வந்து சில மாதங்கள் ஓடிவிட்டது. ஜூ.வி-யின் பார்வைக்கு வைப்பதா வேண்டாமா என்ற மனப்போராட்டத்திலே நாட்கள் ஓடிவிட்டன. தவறு செய்பவர்களை மக்கள் மன்றத்தின்முன் நிறுத்தினால்தான், இனியருத்தர் இப்படிப்பட்ட பாவத்தில் இறங்க மாட்டார்கள் என்று தோன்றியது!'' என்று நிறுத்தியவர்,

''இந்த குருக்களை நான் காஞ்சி நகரத்துக்குள்ளேயே பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன கோயில்களுக்கு அவரே அர்ச்சனை செய்ய வருவார். இப்போது எந்த கோயிலில் இருக்கிறார் என்று தெரியாது...'' என்றார்.

காஞ்சிபுரத்தில் அத்தனை கோயில்களிலும் சுற்றித் திரிந்து எப்படிக் கண்டு பிடிக்க? சிவ லிங்கமும், கதவுக்கு அருகே நாகதேவதையும் அமைந்துள்ள கோயில்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முகமாக, நமது நிருபர் படை புறப்பட்டது.

காஞ்சியில் கால்பட்டதுமே, கண் திரும்பிய திசையெல்லாம் சுற்றுலாப் பயணிகள். ஏராளமான நம்பிக்கைகளோடு பஸ்ஸிலும், காரிலுமாகக் குவிந்து கிடந்தார்கள். ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, அந்தக் கருவறையின் பல்வேறு தோற்றங்களையும், அர்ச்சகரின் க்ளோஸ்-அப் முகத்தையும் எல்லா நிருபர்களிடமும் பிரின்ட் போட்டுக் கொடுத்திருந்தோம். சிறியது, பெரியது என்று வரிசையாகக் கோயில்களுக்கு நீண்டது அந்தப் பயணம். பூக்கடை, பூஜைப் பொருட்கள் விற்பனைக் கடை, டீக்கடை என்று விசாரித்துக் கொண்டே சென்றோம். எங்கும் அப்படி ஓர் இடமும், நாம் தேடும் குருக்களும் கிடைக்கவேயில்லை..!

மூன்று நாள் தேடலுக்குப் பின் ஓர் அர்ச்சகர், ''அட, ........... குருக்களாச்சே இது..! மச்சேச பெருமான் கோயிலில்தான் இருக்கிறார்..!'' என்று அடையாளம் காட்டினார்.
பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள கீழ ராஜவீதியில், அமைதியின் உருவமாக மச்சேசப் பெருமான் திருக்கோயில் காட்சியளிக்கிறது. அந்த மாலை நேரத்தில் நாம் உள்ளே போய்ப் பார்த்தபோது வீடியோ 'க்ளிப்'பில் நாம் பார்த்த இடங்கள் அப்படியே இருந்தன! அங்கிருந்த கோயில் ஊழியர் ஒருவரிடம்,
''திருத்தலங்கள் பற்றிய ஒரு பயணக் கட்டுரைக்கான தகவல் சேகரிக்க வந்திருக்கிறோம். கோயிலைப் பற்றியும், பணியாற்றும் குருக்களைப் பற்றியும் சொல்லுங்கள்...'' என்று கேட்டோம். .......... குருக்கள் பற்றியும் அப்போது சொன்ன அவர், நல்ல விதமாகவே கூறினார். அடுத்தடுத்து நாம் விசாரித்த ஊழியர்கள் சிலரும் அப்படியே சொன்னார்கள்.
ஒரு மணி நேரம் காத்திருந்த நிலையில், சுமார் 6 மணிக்கு நாம் தேடிய குருக்கள் கோயிலுக்குள் வந்தார். முப்பதுகளில் இருக்கும் அவரின் நெற்றியில் திருநீறும் குங்குமமும் மின்னிக்கொண்டிருந்தன. பளிச்சென்று வெளுத்துக் கட்டிய பஞ்சகச்ச வேட்டி... 'வீடியோ காட்சியில் பார்த்தவரேதான்' என்பதில் சந்தேகமில்லை. ஒதுங்கி நின்று கவனித்தோம்... கருவறையினுள் சென்றவர் சுத்தமாக தண்ணீர் விட்டு அலம்பியதோடு, மளமளவென அர்ச்சனையும் தொடங்கினார். கணீர் குரலில் மந்திரங்கள் வந்து விழுந்தன.

அத்தனை பக்தர்களும் இருக்கின்றபோதே, திடீரென்று ஒரு பெண்மணியின் வருகை. கையில் ஒரு பையோடு வந்து அதை குருக்களிடம் அளிக்கிறார் அந்தப் பெண்மணி. 'எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே' என்று யோசித்தால்... வீடியோவில் உள்ள முதல் காட்சியில் இடம்பெறும் அதே பெண்மணி. குருக்கள் அவரை நிமிர்ந்து பார்க்கிறார். ஒரே ஒரு கணம்தான். எதுவுமே பேசாமல் அந்தப் பையை வாங்கி வைத்துக்கொண்டு, ''அப்புறம் வா! பணம் கொடுத்துட
றேன்...'' என்று சொல்லி அனுப்புகிறார். அந்தப் பெண்மணியும் எந்தவித சலனமும் இன்றி வந்த வழியே திரும்பிப் போகிறார்!

பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து, குருக்கள் சற்று ஓய்வானதும் அவரிடம் நாம் பேச ஆரம்பிக்கிறோம். ''உங்களோட நடவடிக்கைகள் பற்றி நாலு பேர் நாலுவிதமா பேசுவது உங்களுக்குத் தெரியுமா?'' என்று ஆரம்பித்து, மெதுவாகக் கேள்விகள் போட்டோம். தன் தரப்பில் எந்த அப்பழுக்கும் இல்லையென்றும், பொறாமை காரணமாக நாலு பேர் நாலுவிதமாகப் பேசத்தான் செய்வார்கள் என்றும், அதையெல்லாம் நம்பிவிடக்கூடாது என்றும் பொறுமை யாகச் சொல்லிக்கொண்டே வந்தார்.
கடைசியாகத்தான் சி.டி. நகலில் பார்த்த காட்சிகளைப் பற்றிக் கேட்டோம். அந்த சி.டி.யிலிருந்து எடுத்த பிரின்ட்அவுட்கள் சிலவற்றை காட்டினோம். இப்போது அவரது பேச்சு நின்றது. சிவந்துபோன முகத்தோடு வெகுநேரம் மௌனமாக இருந்தவர், பிறகு மெள்ள பேச ஆரம்பித்தார்.

''நான் கொஞ்ச வருஷத்துக்கு முந்தி தெரியாம செஞ்ச தப்பு இது. யாரையும் வற்புறுத்தியோ, மிரட்டியோ இப்படியெல்லாம் செய்யலை. என் வீட்டுக்காரிக்குக் கொஞ்சம் உடம்பு சுகமில்லாம போச்சு. அந்த நேரத்துல சபலப்பட்டுட்டேன்...'' என்றவரிடம்...
''எப்போது நடந்திருந்தால்தான் என்ன... நம்பிக்கையோடு ஒப்படைத்த ஒரு புனிதப் பணியை செய்யும் இடத்தில், அதிலும் தெய்வ சந்நிதானத்திலேயே செய்யக்கூடிய செயலா இது! அதிலும் சி.டி-யில் இடம்பெறும் காலண்டர் ஒன்று, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டுகிறதே..?'' என்றோம் அவரிடம்.
மறுபடி சிறு மௌனம். ''இந்தக் கோயில் தவிர இந்தப் பகுதியில் இன்னும் சில கோயில்களிலும் நான்தான் பூஜை பண்ணுவேன். பத்து வருஷத்துக்கும் மேலா இங்கே பூஜை பண்றேன். என் மேல் எந்த புகாரோ, பழிச்சொல்லோ வந்தது கிடையாது. அந்த சி.டி-யில் இருக்கிறதும்கூட நடத்தை சரியில்லாத பெண்கள்தான். தொழில்முறையே அப்படி!'' என்று அப்போதும் நியாயம் கற்பிக்கவே முயன்றார்.
''இந்த கோயிலுக்கு பகவானைப் பார்க்க வர்ற யாரையும் நான் ஏறெடுத்தும் பார்த்தது கிடையாது...'' என்று சொன்னதோடு, தன் பூர்வீகம், குடும்பத்தின் பாரம்பரியம் என்றெல்லாம் மிக விளக்கமாக சில விஷயங்களை எடுத்து வைத்துக்கொண்டே போனார்.
''எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு. அதை நினைச்சு நான் அப்பவே திருந்திட்டேன். ஆனாலும், கோயிலுக்குள் ஏதோ தப்பா நடக்கறதா மோப்பம் பிடிச்சு இங்கே கண்காணிப்பு கெடுபிடியை அதிகம் பண்ணியாச்சு. இப்போ நான் இன்னொரு பெரிய கோயிலிலும் முக்கிய பொறுப்புகளைப் பார்த்துக்கறேன். நான் பழைய ஆளில்லை!' என்று கீழிறங்கிய குரலில் சொல்லிவிட்டுத் தலையைத் தாழ்த்திக்கொண்டார் அவர்.
நாம் அதற்குமேல் எதுவும் பேசாமல் மௌனமாக வெளியே நடந்தோம்!
இந்த சி.டி. பதிவின் நகலை காவல்துறையின் பொறுப்பில் ஒப்படைத்துள்ளோம். நடந்த குற்றத்துக்கு சட்டத்தின் நடவடிக்கையும் தேவைதான் என்ற எங்கள் கருத்து, மதங்களைத் தாண்டி நியாயங்களை நியாயங்களை உணர்ந்த ஜூ.வி. வாசகர்களுக்கும் ஏற்புடை யதாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்..!

நன்றி
- ஜூ.வி. பறக்கும் படை

Friday, September 25, 2009

அமெரிக்காவால் தயாரிக்கப் பட்ட இலங்கையின் போர் குற்றம் தொடர்பான ஆவணம் நாளை வெளியிடப்படவுள்ளது

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் நாளை வெளியிடப்படவுள்ளது.

நாளை வெளியிடப்படவுள்ள இவ்வறிக்கை இலங்கைக்கான அமெரிக்காவின் எதிர்கால உதவி பற்றி தீர்மானம் எடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நாளை வெளியிடப்படும் இவ்வறிக்கை அமெரிக்க காங்கிரஸிடம் கையளிக்கப்படும் எனவும் அது இலங்கைக்கான எதிர்கால நிதியுதவி பற்றிய மீளாய்வுக்கு வழி வகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்ரீபன் றப் இது பற்றி செப்.14ஆம் திகதி ரைம் சஞ்சிகைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் தாம் தற்போது இலங்கை தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும், இலங்கையின் போர் தொடர்பான ராஜாங்கத் திணைக்களத்தின் செப்.21ஆம் திகதிய அறிக்கையை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான அலுவலகமும், வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ராஜாங்கத் திணைக்கள செயலாளரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடுரங்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பார்கள் என்றும் பின்னர் நீதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான விடயங்கள் தொடர்பாக சில முன்முயற்சிகளை எடுக்கும் வரை இலங்கைக்கான சில வகையான நிதியுதவிகளை நிறுத்துமாறு அமெரிக்க செனட் முன்னரே பிரேரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே நாளை வெளியிடப்படவுள்ள அறிக்கை மேற்படி பிரேரணையை அமுல்படுத்த வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.

இதேவேளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஏற்கெனவே தொடர்பு கொண்டு இலங்கையால் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதான கண்கண்ட சாட்சியங்களைப் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

உலகம் முழுவதிலும் இடம் பெறும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அமெரிக்காவுக்கான கொள்கையை வகுப்பதில் போர்க்குற்றங்கள் தொடர்பான அலுவலம் பெரும் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வருட மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஸ்ரீபன் றப் ஐ போர்க்குற்றங்கள் தொடர்பான பிரதிநிதியாக நியமித்திருந்தார். ஏற்கெனவே றப் உகண்டா, டார்பர். பர்மா தொடர்பான அறிக்கைகளை ராஜாங்கத்திணைக்களத்தின் செயலாளர் கிலாரி கிளிங்டனிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டவனிடம் ஓர் மனு

அரசியல் நாடகங்கள்-அங்கே
அவிழ்கின்ற பொய் மொழிகள்
உரசிப் பார்த்தாலும் உடலுக்குள்
உயிர்கொள்ளும் இரத்தம் தான்

வன்னி மண் எங்கும் சுடுகாடாம்
எண்ணிலடங்கா சிதைந்த உடல்கள்
கண்கொண்டு பார்க்க முடியா காட்சிகள்
தன்னம்பிகையில் வாழ்ந்த உறவுகள்-இன்று
தறிகெட்டு ஓடும் அவல காட்சிகள்
தொலைகாட்சியில் பார்த்து பரசவப்படும்
பட்டத்து அரசியல் வாதிகள்

கண்ணீரின் சுவடுகள்-எங்கும்
கழிப்பிழந்த வதனங்கள்
மண்ணை மூடும் குருதி ஆறுகள்
விண்ணை தொடும் வீறிட்ட கதறல்கள்

நரி வேட்டை ஆடும்
நாசக்கார அரசு
கரி நாளாக தொடர்கிறது
கண்ணியமான வன்னி மண்

கண்பரப்பில் எழுதி வைத்த
கரும்புலிகளின் ஒளி வண்ணம்
மண் மீட்க போராடும்
மனம் தளராத மைந்தர்கள்
எரிகுண்டுகள் எப்போ நிற்கும்
ஏங்கும் பிஞ்சுகள்-அங்கு
நிலையான வாழ்வு கிடைக்குமா
நிம்மதி இழந்து தவிக்கும் புலம் பெயர் நாம்

விடுதலை கிடைக்குமா
விண்ணை நோக்கி கரம் குவிக்கும் நாம்
அமைதி வாழ்வுக்காய்
ஆண்டவனின் பதிலுக்காய்
நம்பிக்கையில் நாளை எண்ணுவோம்


--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

சீனாவுடன் பேச புத்த பிக்குகளை ( உலக மாமாக்கள் ) பயன்படுத்தியது சிங்கள அரசு.

புலிகளை அடக்க வெளிநாட்டு படைகளின் உதவியை நாடுதல் அல்லது பணி அமர்த்துதல்.
புலிகளை அடக்க என்று தான் சொன்னேன் புலிகளை அழிக்க எவனாலும் முடியாது 45 நாடுகளின் கருவிகளை கொண்டது, சின்ன நிலபரப்பளவுக்குள்ளே அழிக்கமுடியாத புலிகளை , இப்போது உலகின் 154 நாடுகளில் வாழ்கிற 11 கோடி புலிகளை (இப்போது தமிழர் அனைவரும் புலிகளாக மாறியபின் ), எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது ( திமிருடன் ) என சொல்லுவேன், பயங்கரவாதம் என்ற ஒரு வாக்கியத்தை பயன்படுத்தி புலிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளின் கருவிகளையும் வாங்கினான் சிங்களவன், இங்கிலாந்தின் கருவிகள் , சீனா வின் கொத்து குண்டு விசும் கருவிகள் , இந்தியா ராடார்கள் , விமானங்கள் , இஸ்ரேலின் போர் விமானங்கள் , பாகிஸ்தானின் ரசாயன குண்டுகள், ரஷ்யாவின் ஆளில்லாத விமானம் , அனைத்தையும் பெற்றான் சிங்களவன் , இந்த வரிசை நீண்டு கொண்டு போகும் முக்கியமான சில நாடுகளை மட்டும் சொன்னேன் .

இதற்கு மேல் ஒருபடி மேல போய் , பாகிஸ்தானின் விமான ஓட்டிகளை பணிகள் அமர்த்தினான் சிங்களவன், மேலும் ஐ நா - இதை சமாளிக்க விஜய் நம்பியாரின் தம்பியை பக்கபலமாக வைத்துகொண்டான் சிங்களவன் , ஐ நா யவும் தன் பங்குக்கு செயற்கைக்கோளை வன்னி பக்கம் திருப்பி காட்டி கொடுத்தது .


இப்படி நடந்த போரில் புலிகளின் பின் வாங்கல் நிலை நிகழ்ந்து , இப்போது சிங்களவன் மீது வந்தால் அனைத்து நாடு களைவும் காட்டி கொடுப்பான் , இதை உணர்ந்த இந்தியா அரசு இப்போது செய்வது அரியது தவிக்கிறேதே?


இதை படித்தவுடன் நீங்களே முடிவு செய்யுங்கள்


தோற்றது இந்தியாவா ? ஈழமா ?

குறிப்பு:
இந்த செய்தி தமிழ் உணர்வு உள்ள அனைவரும் எங்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்

வரும் காலமும் , களமும் நமதே
மலரட்டும் ஈழம், விடியட்டும் உலக தமிழர் வாழ்வு

இங்கே சில விரும்பதாக சொல்லை பயன்படுத்தி உள்ளேன் தமிழ் சகோக்கள் மன்னிக்கவும்.

வாழிய தமிழ் வெல்க ஈழம்.

(தோழர் அனுப்பிய செய்தி )


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

Thursday, September 24, 2009

violence against tamilsஇனப்படுகொலை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட தடை செய்யபட்ட குறுந்தகடு.

இனப்படுகொலை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட தடை செய்யபட்ட குறுந்தகடு.


http://naamtamilar.wordpress.com/

அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!

கருணாநிதிக்கு “அண்ணா விருது“ வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள தம்பி,

செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை.

தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“ என்று நீ மாற்றிவிட்டாய். எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப் போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத் திருவிளக்கு“ என்று பட்டமளித்து, பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.

வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர் பதவியை நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.

ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள் தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு வசனம் எழுதியும், தமிழக மக்களை நாம் ஏமாற்றி வந்தோம். ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்க வில்லை.

எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“ கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.

பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன். ஆனால், மதவாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார் ? சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, “மஞ்சள் துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்.

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.

இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலக செல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே !

மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி.... இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கையில், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில் விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது. “தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.

ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.
அண்ணா..

--~--~---------~--~----~------------~-------~--~----~
வெட்ட வெட்ட தழைப்போம்! பிடுங்க பிடுங்க நடுவோம்!! அடிக்க அடிக்க அடிப்போம்!!! அடைக்க அடைக்க உடைப்போம்!!!! அழிக்க அழிக்க எழுதுவோம்!!!! விழ விழ எளுவோம்!!!! காலம் ஒருநாள் மாறும், எம் கனவுகள் யாவும் பலிக்கும். ஈழம் ஒருநாள் மலரும், எங்கள் குறைகள் யாவும் தீரும்

நன்றி http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=785:2009-09-24-07-21-45&catid=42:breakingnews

Wednesday, September 23, 2009

வடக்கின் வசந்தத்தில் நமது மானமிகு குஞ்சுகள்

தமிழனை முகாமிலிருந்து வெளியேற்ற எந்தவித நிர்பந்தமும் கருணாநிதிக்கு கொடுக்காமல் இன்று இன்று இலங்கை/இந்திய அரசின் காசில் தமிழனுக்கே ஆப்பு வைக்கும் வேலையில் இறங்குகிறார்கள். இவர்கள் மாதிரி பிணந்தின்னி கழுகுகள் இருக்கும் வரை தமிழனை காப்பாற்றுவது மிகக்கடினம்.

கீழ்க்கண்ட இணையத்தை பார்க்கவும் இன்றளவும் பெரியார் மணியம்மை அதில் உறுப்பினாராக தொடர்கிறது, மறுப்பு அறிக்கை வெளியிட்டால் போதுமா?.. அதில் இருந்து ஏன் இன்னும் விலகவில்லை...? (கடைசியாக போய் சேர்ந்ததே இதற்காகத்தான் என்னும் போது எப்படி விலகுவார்கள்..)... இந்த கேள்வியையும் மானமிகு(?) களிடம் கேட்டு எங்களுக்கு பதில் அளித்தால் நலமாக இருக்கும்..


http://www.cidc.in/aboutus3.html நமது குஞ்சுகள் 90 வதாக உள்ளதை கவனிக்கவும்.


சிந்திப்போம், செயல்படுவோம்




25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை



24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்







23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்! பதற வைக்கும் படங்கள்!







22)உறங்காத கண்மணிகள்! உலுக்கும் உண்மைகள்!






21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்







20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்







19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்







18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..






17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது








16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா?







15) இந்தமுறை ஏன் ஜெயலலிதா வேண்டும் ? ஏன் கலைஞர் வேண்டாம் ?






14) தமிழக உறவுகளே.! இம்முறை.. ஒரே முறை.. தமிழ் இனநலம் கருதி வாக்களியுங்கள்!






13) காங்கிரசுக்கும், திமுகவுக்கும் போடாதே ஓட்டு தமிழினத்திற்கு வைக்க்காதே வேட்டு






12) தமிழக உறவுகளே! ஓட்டுப் போடும் முன் ஒரு நிமிடம்...!






11) ஏன் கருணாநிதிக்கு ஒட்டு போட கூடாது?






10) தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு எதிரான "இறுதி யுத்தம்" காணொளி இதுதான்..?






9) கவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி






8) இந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்கும், தமிழர்களுக்கும்தான்






7) ஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்!






6) காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!






5) முல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற்கும், காங்கிரஸிற்கும்






4) தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் வேதனைப் பட்டியல்






3) தமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து







2) காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, அடுத்தகட்ட உதவிகளை தமிழீழம் எதிர்பார்க்க முடியும்







1) கருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பிறப்பதை பார்க்கவேண்டும். வயிறெரிந்து சாகவேண்டும்






ஒன்று சேரட்டும் - கரங்கள்

ஒன்று சேரட்டும் - கரங்கள்
ஒன்று சேரட்டும் - கரங்கள்
ஒன்று சேரட்டும்.
ஒன்றாய் உயரட்டும் - குரல்கள்
ஒன்றாய் உயரட்டும்.

தமிழன் என்ற ஒருமைப் பாட்டை
தமிழர் என்று பன்மையாக மாற்றிவோம்.
அணி திரள்வோம்......அலை அலையாய்......
அரவணைப்போம்....... என் தாயாக உறவுகளை.

அடுத்த நாட்டுப் பிரச்சனையைக்
கேட்கவில்லை நாங்கள்.
அடுத்த நாட்டு அரசியலில்
நுழையவில்லை நாங்கள்.

அமைதிப் பூங்காவில்.....உறங்கிக்
கொண்டிருந்த எம் உறவுகள்.- இன்று
உண்ண உணவின்றி...உடுக்க உடையின்றி...
உறங்க உறைவிடமின்றி....உதவ உறவுகளின்றி...
அகதியாய்... அனாதையாய்....அரக்கன் பிடியில்.

பாரதமே படுத்து உறங்காதே. - எம்
பாதி உறவு உன்னிடம்.
மீதி உறவு கண்ணீருடன்
இன்று எமக்கு இன்நிலை.
நாளை உனக்கும் அதே நிலை...

அந்த நேரம் குரல் கொடு.
மறவர் படை மார்வுகள்
மானம் காக்க...
திசை திரும்பும் உன் வாசம்

ஈழம் கடுகுபோல் சிறிது. ஆனால்
ஈகை கடலைப்போல் பெரிது.
தஞ்சம் என்று வந்தால்...
தாங்கும் எம் நெஞ்சங்கள்.

வல்லரசே.... உன்னிடம்
வார்த்தை இல்லையா...?
வாய் கிழிய எம்மினம்
வருந்திக் கதறுகிறதே...- நீயொரு
வார்த்தை சொன்னால்...
உயிர் பெறும் தமிழீழம்.

இல்லையெனில்...
வல்லாதிக்க அரசே.....
இனிவரும் முடிவில் - உன்
பேச்சுக்கு இடமே இல்லை.

தமிழுக்கு தலை வணங்கும்
நாடுகள் எதுவோ...
உங்கள் அபயக் குரலுக்கு
உயிர் கொடுப்போம் நாங்கள்





--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

Tuesday, September 22, 2009

நாம் தமிழர் தோழர்களுக்கு வணக்கம்.

தோழர்களே, உங்களுடன் அறிமுகமாகும் இத்தருணம் என்னைப் பற்றிய
அறிமுகத்திற்காக கீழ்க்காணும் பதிவை இடுகிறேன். தொடர்ந்தும் உங்களோடு
நாம் தமிழர் பேரியக்கத்தின் உறவுக் கொடியாக கனடா நாட்டில் இருந்து
பயணிப்பேன்.


விழுகை என்பது விதிப்படியும்
எழுகை என்பது வினைப்படியும்
நிகழ்ந்தே ஆகவேண்டும்.

நேற்றைய நாள்
சத்திய வேள்வியில் திலீப சொரூபம் தீய்ந்த போது
கண்ணீரில் கருத்தரித்தது கால நெருப்பு

இந்தியப்பூதத்தின் பொம்மலாட்டம், புனைவெல்லாம்
விடுதலைத் தழலில் வெந்து போயின.

சத்திய வேள்வி சாகாவரம் பெற்றது.
இந்தியத்தை விட்டு
காந்தீயம் கப்பலேறிக் காணாமல்போனது.

இனத்தின் நித்திய வாழ்வுக்கு
நிம்மதியைக் கேட்ட சத்தியத்தேவன்
சருகாய் உலர்ந்து உயிர் களைந்தான்.

பிராந்திய வல்லரசின் சூழ்ச்சி
தோற்றதன் எதிரொலியை
ஈழத்தின் முற்றம் வடுக்களாய் ஏந்தியது.

மக்களின் தோள்களே மண்மீட்பைச் சுமந்தன.

ஒப்பாரியின் உள்ளொலியில்
பறைகளும் முரசுகளும் அதிர்ந்தன.

கால நெருப்பை ஏந்திய கண்களே
காவல் தெய்வங்கள் ஆயினர்.

அடைக்கலம் தந்த உறவுகளே
ஆற்றல்களையும் வழங்கினர்.

இன்னலைச் சுமந்த இருப்புகளே
ஈழத்தை மனதில் ஆழப்படுத்தின.

முகாரிகளை இசைத்தபடியே
புல்லாங்குழல்கள் பூபாளத்தை நோக்கி நகர்ந்தன.

பிணம் புழுத்த வீதிகளிலேயே
பிரசவங்களும் உதிரத்தைப் பாய்ச்சின.

மனைகளின் முகப்புகளையே மயானங்களாக்கி
சிதைகளை மூட்டிய வரலாறுகள் தோன்றின.

எண்ணிக்கையற்ற வலிகளைச் சுமந்தும்
எழுகையே எங்களின் இருப்பை வனைந்தது.

ஒலியை இழந்தால்
பறைக்குப் பெருமையில்லை

பாதி வழியில் நின்று விட்டால்
பயணத்தில் முழுமையில்லை

விதியென்று ஓய்ந்து விட்டால்
மதியிருந்தும் பலனில்லை

விழல் என்று முடிவெடுத்தால்
விடுதலைக்கு இடமில்லை

நித்திய வாழ்வுக்காய்
நிம்மதியைக் கேட்ட இனம்
சத்திய வாழ்வின் சருகாகிக் கிடப்பது
காலநீட்சியின் காட்சி ஆதல் கூடாது

மாற்றமே இல்லாதது மண்மீட்பு.

மீட்சியின் திசையில் காற்றெழும் காலமுணர முடியாமல்
தத்தளித்து நிற்பது எவருக்கும் இயல்புதான்

கடந்த காலத்தின் நீட்சியை ஒரு கணம்
காட்சிப்படுத்தல் காலத்தின் அவசியம்.

மீண்டும்…..
கண்ணீரில் கருத்தரிக்கட்டும் காலநெருப்பு.
--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en

நாம் தமிழர் பேரியக்கம்... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

விலை போன தமிழர்களை
காலில் விழுந்தாவது
மனதை மாற்றுவோம் !!!!
ஆதரவற்ற தமிழனுக்கு
நமது ஆன்மாவையும்
சொந்தமாக்குவோம் !!!

சொந்தமில்லை என்று
ஏங்கி கிடக்கும் கூட்டதிற்கு
கூட்டம் கூட்டமாய்
சொந்தமாவோம் !!!

துரோகம் செய்யும்
மாந்தர்களை
மாந்தர்கள் இல்லையென
உணர செய்குவோம் !!!!

----
தமிழ் மீதும்
ஆதரவற்ற தமிழர்களின் மீதும்
பற்று கொண்ட தமிழன்
அன்புடன்
அருண் பிரசாத் ஜெ



--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en

'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..

விலை போன தமிழர்களை
காலில் விழுந்தாவது
மனதை மாற்றுவோம் !!!!
ஆதரவற்ற தமிழனுக்கு
நமது ஆன்மாவையும்
சொந்தமாக்குவோம் !!!

சொந்தமில்லை என்று
ஏங்கி கிடக்கும் கூட்டதிற்கு
கூட்டம் கூட்டமாய்
சொந்தமாவோம் !!!

துரோகம் செய்யும்
மாந்தர்களை
மாந்தர்கள் இல்லையென
உணர செய்குவோம் !!!!

----
தமிழ் மீதும்
ஆதரவற்ற தமிழர்களின் மீதும்
பற்று கொண்ட தமிழன்
அன்புடன்
அருண் பிரசாத் ஜெ



--~--~---------~--~----~------------~-------~--~----~
'நாம் தமிழர் பேரியக்கம்'... இது நமக்கு நாமே உருவாக்கிகொள்ளும் அரசியல் இயக்கம்..
You received this message because you are subscribed to the Google
Groups "நாம் தமிழர் பேரியக்கம்" group.
To post to this group, send email to naamtamilar@googlegroups.com
To unsubscribe from this group, send email to
naamtamilar+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/naamtamilar?hl=en

Monday, September 21, 2009

நாம் தமிழர் இயக்கம் உறுப்பினர் சேர்க்கை

பெரிய அண்ணன் பிரபாகரனின் அன்பு தம்பியாக இன்று தமிழர்களின் வாழ்வினில் சுடர் ஏற்ற வந்த இந்த புரட்சி தமிழ் புலியினை நாம் தோள் கொடுத்து உயர்த்துவோம். அவரது முதல் கன்னி முயற்சியான நாம் தமிழர் இயக்கம் மேன் மேலும் வளர்ச்சியடைய நாம் நமது அன்பு அண்ணன் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கத்தினில் இணைந்து தமிழர்களின் வாழ்வில் ஓளியேற்ற பாடுபடுவோம்.

இதோ இன்று ஒருவர் நமக்காக களமிறங்குகிறார். பதுங்கி பாயும் புலியாக சீமான் இருக்கட்டும். பெரிய புலி பதுங்கி இன்று சீமான் என்ற புலி தமிழர்களை வேட்டையாடும் காடையர்களை பலி கொள்ள வந்துள்ளது.

புறப்படு தோழா, இன்னும் ஏன் பயம், தயக்கம், தமிழனின் அடிமை என்னும் சங்கிலியினை தகர்த்தெறிவோம்.

நாம் தமிழர் இன்று ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுக்க உங்களின் அனைவரின் ஆதரவினையும் அளியுங்கள்.

உங்களை உறுப்பினராக இணைத்து கொள்ளுங்கள் இங்கே, இதோ நமது புதிய தளம்

நாம் தமிழர்

'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை

பெரிய அண்ணன் பிரபாகரனின் அன்பு தம்பியாக இன்று தமிழர்களின் வாழ்வினில் சுடர் ஏற்ற வந்த இந்த புரட்சி தமிழ் புலியினை நாம் தோள் கொடுத்து உயர்த்துவோம். அவரது முதல் கன்னி முயற்சியான நாம் தமிழர் இயக்கம் மேன் மேலும் வளர்ச்சியடைய நாம் நமது அன்பு அண்ணன் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கத்தினில் இணைந்து தமிழர்களின் வாழ்வில் ஓளியேற்ற பாடுபடுவோம்.

இதோ இன்று ஒருவர் நமக்காக களமிறங்குகிறார். பதுங்கி பாயும் புலியாக சீமான் இருக்கட்டும். பெரிய புலி பதுங்கி இன்று சீமான் என்ற புலி தமிழர்களை வேட்டையாடும் காடையர்களை பலி கொள்ள வந்துள்ளது.

புறப்படு தோழா, இன்னும் ஏன் பயம், தயக்கம், தமிழனின் அடிமை என்னும் சங்கிலியினை தகர்த்தெறிவோம்.

நாம் தமிழர் இன்று ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாக உருவெடுக்க உங்களின் அனைவரின் ஆதரவினையும் அளியுங்கள்.

உங்களை உறுப்பினராக இணைத்து கொள்ளுங்கள் இங்கே, இதோ நமது புதிய தளம்

நாம் தமிழர்

பிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர், ‘’நான் கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப்பேசக்கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.

போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப்பேசவே இல்லை.

ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப்போனார்கள்.

ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள்’’என்று தெரிவித்தார்


நன்றி நக்கீரன்

Sunday, September 20, 2009

தமிழனுக்கு குரல் கொடுக்காதவன், உலகத்தமிழர்களுக்கு மாநாடு நடத்துகிறானாம்

ராசபக்சேக்கு போட்டியாக தமிழர்களை பற்றி எந்த நினைப்பும் இல்லாத ஒருவர், உலகத்தமிழர்களை காப்பாற்ற ஒரு மாநாட்டை எழுப்புகிறாராம். என்ன கொடுமை இது.


சீமானின் இது குறித்து தனது அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எழுச்சிப் போராட்டங்களை திசைதிருப்பும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி ஈடுபடுவதாக இயக்குனர் சீமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வதைமுகாம்களில் வாடும் மூன்று இலட்சம் வன்னி மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் எடுக்காது, கோவையில் உலகத் தமிழ் மாநாட்டைக் கூட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் திட்டமிட்டிருப்பதாக தமிழகத்தின் தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களின் மத்தியில் கருத்து வெளியிட்டிருக்கும் இயக்குனர் சீமான், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இடம்பெறும் போராட்டங்களை திசைதிருப்பி, மக்களின் போராட்ட குணத்தை மாற்றும் நோக்கத்துடனேயே உலகத் தமிழ் மாநாட்டை கருணாநிதி ஏற்பாடு செய்திருப்பதாகக்

Thursday, September 17, 2009

முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்

வன்னிக்குச் சென்ற பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி என்பவர் இறுதிவரை முள்ளிவாய்க்கால் பகுதில் இருந்து பின்னர் தடைமுகாமில் இருந்து தற்போது மீண்டு பிரித்தானியா வந்துள்ளார். அவர் பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்





http://www.guardian.co.uk/world/2009/sep/15/sri-lanka-war-on-tamil-tigers

'As the shells fell, we tried to save lives with no blood or medicine'

Damilvany Gnanakumar witnessed Sri Lanka's bloody conflict from a Tamil hospital - then spent months detained in a camp. She tells Gethin Chamberlain her story

Gethin Chamberlain talks to Damilvany Gnanakumar, a 25-year-old British Tamil who witnessed the horrors of the conflict Link to this video

The young mother was standing by the side of the road, clutching her baby. The baby was dead.

Damilvany Gnanakumar watched as she tried to make a decision. Around them, thousands of people were picking their way between bodies strewn across the road, desperate to escape the fighting all around them.

"The mother couldn't bring the dead body and she doesn't want to leave it as well. She was standing … holding the baby. She didn't know what to do … At the end, because of the shell bombing and people rushing – there were thousands and thousands of people, they were rushing in and pushing everyone – she just had to leave the baby at the side of the road, she had to leave the body there and come, she had no choice. And I was thinking in my mind 'What have the people done wrong? Why are they going through this, why is the international government not speaking up for them? I'm still asking."

Four months later and Gnanakumar is sitting on a cream leather sofa in the living room of the family home in Chingford, Essex, reliving the final days of Sri Lanka's brutal civil war.

For most of those four months, the 25-year-old British graduate was imprisoned behind razor wire inside the country's grim internment camps, home to nearly 300,000 people. She was released last week, partly as a result of pressure from this newspaper, and flew back into London on Sunday.

The last time she publicly spoke about the conflict was from the hospital where she was working inside the ever-shrinking war zone in Sri Lanka's north-east. Then, the national army had surrounded the small sliver of land where the remnants of the Tamil Tiger guerrillas held out and where hundreds of thousands of civilians had taken refuge. She had been in despair: a shell had just struck the hospital and dozens were dead. "At the moment, it is like hell," she said then.

Gnanakumar was one of a small group of medics treating the wounded and providing a running commentary to the outside world from behind the lines. For months she had managed to stay alive while around her thousands died. At night, she lived in bunkers dug in the sand. During the day, she helped in the makeshift hospitals, dodging the shells and the bullets, tending the wounded and the dying, as the doctors tried to operate with butchers' knives and watered-down anaesthetic.

Now her damning account provides a powerful rebuke to the claims of the Sri Lankan president, Mahinda Rajapaksa, that the defeat of the Tamil Tigers was achieved without the spilling of a drop of civilian blood.

Born in Jaffna in the Tamil-dominated north of Sri Lanka in 1984, Gnanakumar and her family moved to Britain in 1994. Until 28 February last year, she had not been back. She had just completed a biomedical degree at Greenwich University, but her short-lived marriage was on the rocks and she decided it was time to make a clean break. She left the house, telling no one where she was going.

Arriving in the capital, Colombo, she headed for Vanni, the Tamil heartland, to stay with a relative she calls her brother (her real brother is back in the UK, along with her two sisters). There seemed little sign of danger, but by June 2008 fighting was getting worse: the Tamil Tigers, or Liberation Tigers of Tamil Eelam (LTTE), still thought they would be able to negotiate a ceasefire, as they had done in the past, but the government had other ideas. They were determined to destroy the LTTE once and for all. Gnanakumar decided to stay on to try to help those who were trapped by the advance.

Even before the arrival of the government's ground forces, there had been regular air raids by air force Kfir jets. But in early January artillery barrages began, forcing the population to move.

That was when the reality of the war hit Gnanakumar for the first time.

"It was raining and … you could see everywhere on the road the blood is running with the water and the bodies were left there because there was no-one to identify who was dead and who is alive, the bodies were just laid down on the floor and that's the first time I saw dead bodies and wounded people crying out, shouting."

Wherever they stopped, they built a bunker, digging down until they could stand up in the hole, cutting down palm branches and laying them across the top for a roof and packing sandbags on the top and around the sides.

As the frontline advanced, trapping as many as 300,000 people inside a shrinking enclave of LTTE-held land, Gnanakumar went to the makeshift government hospital, which had moved into a former primary school, and volunteered to help, dressing wounds and administering first aid.

Her laboratory training had not prepared her for anything like this, but she learned as she went along. As the fighting intensified, they were treating as many as 500 people every day in two rooms. "They had a shortage of medicine but they had to somehow save the people. The last two weeks or so there was a shortage of everything."

With replacement blood running out, she had to filter what she could from the patients through a cloth before feeding it back into their veins. When the anaesthetics ran short, they diluted them with distilled water. "I watched when there was a six-year-old boy," she said. "They had to take off the leg and also the arm, but they didn't have proper equipment, they just had a knife that the butchers use to cut the meat, and we have to use that to take off his leg and arm. He cried and cried."

As the army closed in, it got worse.

"People were running and running to get them safe away from the shell bombing, but they couldn't and it came to a point where we thought we are all going to die, there is no way we can be safe anymore here, but we just have to take it. I mean, you can't get out of the shell-bombing. I didn't think that I would be alive and I would be here now. I said OK, I'm going to die, that is the end of it.

"One day I was inside the [operating] theatre and the next room was bombed. We had a lot of the treated people left in the room for the doctors to go and monitor and they all died in that shell bomb. And they [the Sri Lankan forces] again bombed the hospital and one of the doctors died in that."

Inside the hospital, there was no respite. Gnanakumar cannot forget the day a mother was brought in, injured, clutching her baby.

"She had the baby on her lap, the baby is dead and the mother didn't know and the doctor said: 'Don't tell her, because if we tell her now she will start crying out and shouting and … we have to save the mother first.' So we said: 'OK, give the baby to us, we'll look after her you go and get the treatment from the doctor,' and only after she got the treatment we told the truth, that your baby is dead. I can easily say it, but at that moment I was in so much pain, the innocent baby, the mother didn't know the baby was dead, she thought 'my baby is sleeping'.

"There were so many incidents. Another time the mother was dead and the baby was still suckling."

The fighting was getting closer. They ate what they could find and slept, those who could, in the occasional lulls.

"You have to be ready to run, you can't relax and go to sleep, any minute you just have to be ready," she said.

Gnanakumar could not take any more. On 13 May the hospital had been hit, killing about 50 people. "The bunker right next to ours had a shell on top of it and there were six people in the same family died and three were wounded.

"I saw them … suddenly I start hearing people are crying out and I thought, it has to be somewhere really close … I came out of my tent and I saw blood everywhere and the people – I couldn't even imagine that place, there was blood and then the bodies were into pieces everywhere and my brother said: 'Just pack up and let's get away from this place.'"

In the last five days, she says, she believes about 20,000 people died. It is a very high estimate, though the UN has acknowledged the true death toll may never be known. Tamil groups such as the Global Tamil Forum say her account corroborates their own figures drawn from interviews with survivors.

Over the course of the three-decade war, it is estimated that up to 100,000 people died. But independent confirmation of the death toll in the final days has been impossible. The Sri Lankan government has barred independent journalists from the war zone to this day, and has expelled UN officials and aid workers.

Meanwhile, the survivors of the final assault have been spirited away inside sprawling camps in a militarised zone.

It was to those camps, at Menik Farm, that Gnanakumar was taken. Following that last bombing, she joined thousands fleeing towards the government lines. "We start moving and after walking about one hour or so we saw the Sri Lankan army. They were saying: 'Come, you are safe now, food will be provided for you.' There were bodies everywhere, like into pieces. We had to just walk." That was when she saw the mother agonising over what to do with her dead baby. No one had time to bury the bodies, she says. Some pushed them into bunkers and covered them with a little sand. That was the best they could do.

That night, they slept in a school, then they were taken by bus to the town of Vavuniya. She called her mother: "I said, Mum, just get me out of here, I just want to get out of this place. And the phone got cut off."

The Sri Lankan government has built a series of camps to house the estimated 300,000 people who poured out of the war zone. It claims that it needs to hold the civilians until it can weed out the former Tamil Tiger fighters; its critics, including many UN organisations and independent aid groups, question why, even if that is true, it needs to imprison children and the elderly behind barbed wire, and why it has not more quickly identified the rebels. Despite pledges to start sending the internees back to their homes "at the earliest possible opportunity", the UN says only 2,000 have so far been released.

There was no food the first day Gnanakumar arrived, and she had lost contact with the people she had been with. She slept in a tent with strangers.

Even after the privations of the war zone, conditions in the camp still came as a shock.

"Wherever you go there are big queues, whatever you want you have to queue. The toilets are terrible, I can't describe how disgusting. Flies everywhere, mosquitoes, unhygienic … People had all sorts of illnesses.

"People have lost their family members, they are separated from their families … and they are going through depression."

Accounts circulated of rapes and murders, of people disappearing. Some people committed suicide: a teacher was found hanging from a tree.

Military intelligence officers were roaming the camps, looking for former Tamil Tigers, she said. "It is an open prison, you are free to walk but you are inside a prison, you are not allowed to step out. You can't. There were guards everywhere and checkpoints."

A couple of days after she arrived, the British high commission made contact through the UNHCR. An appeal from her parents in the Guardian brought fresh hope and a flurry of activity: she was moved from the overcrowded zone two to zone one, the part of the camp the authorities show to visitors.

"I was there when the UN secretary Ban Ki-moon came in … He stayed there for about 10 minutes and just went. Why didn't he go into the camp and talk to the people and spend some time asking them what their problems were? I thought he has a responsibility and people were expecting something from him. They expected much from him and he just spent 10 minutes and that's it."

The officials told Gnanakumar she would be staying for a couple of days and would then be released. "And then the 48 hours turned into three days and then it turned into weeks and months and I thought OK, now I understand it is not going to happen." She was interrogated five times – what was she doing there? Why had she been in the hospitals?

The call to say she was going home came last week. She was taken to Colombo to meet the president's brother, Basil Rajapaksa.

"He said OK, you went through so much in the country and now you are released you can go and join your family and be happy. He wasn't sorry about it." She was then handed over to British officials.

She speaks in a matter-of-fact way, rarely betraying emotion. Her hair has been tied back tightly – she had beautiful hair before she left, she says, but lost most of it in the camps. She is not sure what she will do now, maybe something in the field of medicine.

"I'm happy and proud of myself that I was able to help the people. I still think it is unreal that I am in the UK … I never thought I would be alive and coming back, even in the camp.

"After looking at the people dying and dead bodies everywhere, it is like nothing threatens me any more, it is like I have had the hard time in my life and I think I am prepared to take up whatever happens in life now.

"I'm not that old Vany that sits down and cries for little things. I'm stronger now after going through and seeing all that problem. My mind is clear now."

The Sri Lankan high commission in London last night denied Gnanakumar's allegations and called the claim of more than 20,000 civilian deaths "unsubstantiated and fabricated". A spokesman said that at no time did it target "government hospitals or any other civilian infrastructure where the civilians were accommodated".

The spokesman said: "The government of Sri Lanka has all reasons to believe that Ms Gnanakumar has gone to Sri Lanka and worked in the conflict area according to the LTTE's agenda, while overstaying her visa."

He said the government was "continuously assisting the internally displaced Sri Lankans".