Sunday, June 14, 2009

தமிழர்களை, தடுப்பு முகாம்களில் சட்டவிரோதமாக தடுத்து வைப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறீலங்கா அரசு சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாற்றியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு மேலும் கூறியிருப்பதாவது:

போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களை சிறீலங்கா அரசாங்கம் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை உடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

வடபகுதியில் நடைபெற்ற போரில் இடம்பெயர்ந்த மக்களை ஒரு வருடத்திற்கும் மேலாக சிறீலங்கா அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. குடும்பங்களாகவும் மக்கள் படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது அனைத்துலக சட்டங்களை மீறும் செயலாகும்.

இந்த வருடத்தின் இறுதிக்குள் முகாம்களில் உள்ள மக்கள் தமது இடங்களுக்கு செல்லலாம் என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என்பதை பார்க்கும்போது அவர்கள் மக்களை காலவரையறையின்றி தடுத்துவைக்க திட்டமிட்டிருக்கலாம் என்ற கருத்துக்கள் தோன்றியுள்ளன.

இடம்பெயர்ந்துள்ள மக்களும் இலங்கையில் உள்ள ஏனைய மக்களின் உரிமைகளை கொண்டவர்கள். இடம்பெயர்ந்த மக்களில் இருந்து விடுதலைப் புலிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டாலும், கைது செய்யப்படுபவர்கள் எழுந்தமானமாக தடுத்து வைக்கப்படுவது அனைத்துலகத்தின் விதிகளை மீறும் செயலாகும்.

தேவையற்ற முறையில் மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களை தடுத்தல் கூடாது. அதாவது, கைது செய்யப்படுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை சிறீலங்கா அரசு தடுத்து வைத்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments: