Thursday, April 16, 2009

100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புறுத்தல் - கருணாநிதி அறிவிப்பு

இவர் சொல்றது மாதிரி சொல்றது, அதான் எதுவும் நடக்காதுன்னு ரெண்டு கொலைகார கூட்டணியும் முடிவு பண்ணீட்டிங்களே, அப்புறம் ஏனிந்த நாடக தலைவரே. கண்டிப்பாக இந்த தேர்தலில் இந்த கொலைகார கூட்டணி மண்ணை கவ்வப்போவது உறுதி. ரொம்ப நடிக்காதிங்க தலைவரே மக்கள் எல்லாம் முடிவு பண்ணியாச்சு யாரை டில்லிக்கு அனுப்ப வேண்டும் என்று.




இலங்கையில், நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகராசி கூட்டணி


"பாராளுமன்ற மக்களவைத் தலைவர் பதவி நிறைவுறுவதை முன்னிட்டு சோம்நாத் சட்டர்ஜிக்கு நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும், பா.ஜ.க. உறுப்பினர்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு'' -செய்தி.

பதில்:- இரண்டு கட்சிகளில் ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இங்கே தமிழ்நாட்டில் மரபுகளைப் பற்றிக் கவலைப்படாத "மகராசி''யின் தலைமையில் உள்ள கூட்டணியில் இருக்கிறார்கள். இன்னொரு கட்சி; அந்த "மகராசி''யுடன் எதிர்காலத்திலே கூட்டணி அமைத்திடும் யோசனையில் இருக்கிறார்கள். பிறகு மரபாவது, மண்ணாங்கட்டியாவது?

நாக்கின் இயல்பு


"சென்னை தமிழர் பேரணியில் "போரஸ்'' மன்னன் பற்றி தாங்கள் குறிப்பிட்ட உபமானத்தை ஒரு சிலர் திரித்து விஷமம் செய்கிறார்கள்'' -செய்தி.

பதில்:- போர் முனையில் பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால் அவரை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தி தண்டனை அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயா தீர்மானம் நிறைவேற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயா அளித்த பேட்டியிலே விடுதலைப்புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் சரண் அடைய வேண்டும் என்றே கூறினார். ஆனால் நான் பேரணியில் பேசும்போது, பிரபாகரனுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படின்(?), அவரை போரஸ் மன்னனை நடத்தியதுபோல் நடத்த வேண்டும் என்று கூறினேன். ஜெயாவின் சட்டமன்றத் தீர்மானம் சிலருக்கு இனிக்கிறது - என் பேச்சு கசக்கிறது - எல்லாமே அவர்கள் நாக்கின் இயல்பு! போக்கின் குணம்!

மத்திய அரசு முயற்சி

"இலங்கையில் இரண்டு நாள் போர் நிறுத்தம்''- செய்தி

பதில்:- கிள்ளிக் கொடுக்கும் பண்டத்துக்கும் - அள்ளிக் கொடுக்கும் பண்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை உணருகிறேன் - ஏன்; முழுமையான போர் நிறுத்தம் செய்தால் தான் என்ன முழுகிப் போய்விடும்! அதற்கான முயற்சியில் நமது மத்திய அரசு ஈடுபடுமென நம்புகிறேன். ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வழக்கு ஏன்?

"அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயாவுக்கு எதிராக அவதூறு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது'' -செய்தி.

பதில்:- 23.1.09 தேதிய நாளேடுகளில் ஜெயாவின் அறிக்கை வெளிவந்திருந்தது. அந்த அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்காக அரசு சார்பில் வசூலிக்கப்பட்ட நிவாரண நிதி இலங்கைத் தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்ததா என்ற தகவல் எதுவும் வரவில்லை என்றும், அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக் கொண்டு விட்டாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றும் வக்கிர எண்ணத்துடன் கூறியிருந்தார்.

உடனடியாக அதற்குப் பதில் கூறியதோடு நிற்காமல் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றும் அனுப்பி மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அதைக் கூறிய ஜெயா மீது வழக்கு தொடருவேன் என்றும் தெரிவித்தேன்.

அதற்குப் பதில் கூறிய ஜெயா மக்கள் சொல்கிறார்கள் என்றுதான் தெரிவித்ததாக பதில் கூறினார். எனவேதான் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றச்சாட்டினைக் கூறும்போது ஆதாரத்தோடு கூற வேண்டும். சொல்வதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு சொல்ல வேண்டும். சொல்லிவிட்டு பிறகு மக்கள் கூறியதை சொன்னேன், அவன் சொன்னதை சொன்னேன், இவன் சொன்னதைச் சொன்னேன், என்று பின்வாங்கினால் வழக்கைச் சந்தித்துத்தானே ஆக வேண்டும்!

மதிக்காத இலங்கை அரசு

"தமிழக முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியிருக்க முடியும், ஆனால் அவ்வாறு செய்ய கருணாநிதி தவறி விட்டார்'' -ஜெயா குற்றச்சாட்டு.

பதில்:- இதே ஜெயா, இலங்கை என்பது இன்னொரு நாடு, அந்த நாட்டின் பிரச்சினையிலே இந்தியா ஓரளவிற்குத்தான் தலையிட முடியும் என்று சொன்னது உண்டா? இல்லையா? ஜெயா முதல்-அமைச்சராக இருந்தபோது பேரவையில் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தைக்கூட இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எதிர்க்கட்சிகள் கொண்டுவர அனுமதிக்கவில்லை.

ஆனால் தமிழக அரசின் சார்பில் நாம் தொடர்ந்து மத்திய அரசுக்கு எத்தகைய அழுத்தத்தை கொடுத்து வருகிறோம் என்பதை தமிழ்நாட்டு மக்களும், இலங்கைத் தமிழர்களும் நன்றாகவே அறிவார்கள். உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் மன்றமும் கொடுக்கும் அழுத்தத்தையே மதிக்காதவர்களாக இலங்கை அரசினர் இருக்கின்றனர். ஆனால் தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் மீது குற்றம் சாற்றி, தேர்தல் ஆதாயம் தேடிட எதிர் அணியினர் முயற்சிக்கின்றனர்.

குழப்பமோ குழப்பம்

"இலங்கையில் உள்ள தங்களது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமையால் தமிழ் மக்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர்''- ஜெயா பேட்டி.

பதில்:- ஜெயா முதல்-அமைச்சராக இருந்தபோது இலங்கைப் பிரச்சினைக்காக என்ன செய்தார்? 2002-ம் ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சட்டமன்றத் தீர்மானத்தில், விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டுமென்று முன்மொழிந்தாரா? இல்லையா? அந்தத் தீர்மானம் பற்றி தற்போது அவருடன் கூட்டணி வைத்துள்ள பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகளின் நிலை என்ன?

அதையெல்லாம் மறைத்துவிட்டு இப்போது அந்த அணியினர் மத்திய, மாநில அரசுகள் மீது பழி போட்டால் அது எப்படி சரியாகும்? அதே பேட்டியில் ஜெயா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இப்போது கூறியிருக்கும் கருத்துகளில் தவறு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே? இதுதான் குழப்பத்திலும் குழப்பம், பெரிய குழப்பம்!

புளிக்கும் பழம்

"பிரதமராக வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த எண்ணமும் இல்லை''- ஜெயா பேட்டி.

பதில்:- ஆகா! எப்படிப்பட்ட தன்னலமற்ற தலைவியை தமிழகம் பெற்றுள்ளது! சோனியா காந்தி 2004-ம் ஆண்டில் பிரதமர் பதவி தனக்குத் தேவையில்லை என்று கூறியதைவிட மிகப்பெரிய தியாகத்தை அல்லவா தமிழகத்தின் தலைவி செய்ய முன்வந்துள்ளார்! திருமங்கலம் இடைத் தேர்தலிலே வெற்றிபெற வக்கில்லை, இதிலே பிரதமர் பதவியா? "சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்'' என்ற கதைதான்!

எங்கு போனாலும் குழி பறிப்பு

"மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்'' -டாக்டர் ராமதாஸ், பாமக.

பதில்:- தற்போது டாக்டர் ராமதாஸ் இருப்பது அ.தி.மு.க. கூட்டணி. அந்தக் கூட்டணியின் தலைவர் ஜெயா. அவர் தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்ïனிஸ்ட் கட்சிகளுக்கும் "பெப்பே'' காட்டுகின்ற வகையிலும்- அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்! இப்போதாவது புரிகிறதா? அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார் என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டா வேண்டும்.

குறும்புப் படங்கள்

"தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தலை முன்னிட்டு குறும்படங்கள் தயாரித்திருக்கிறார்களாமே?''

பதில்:- குறும் படங்கள் அல்ல; குறும்புப் படங்கள்! தேர்தல் ஆணையமும், சட்டமும் அவற்றை ரசிக்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 Comment:

Anonymous said...

ஈ மெயில் இன்டர்நெட் என்டு உலகம் எங்கயோ போய் விட்டது...இந்த ஆள் இன்னமும் தந்தி அடிக்கிறதிலயே நிக்குது.....