Monday, May 4, 2009

சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க... -:சீமான் ஆவேசப்பேச்சு

திரைப்பட ஒளிப்பதிவாளர் கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.


உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், கேமரா கவிஞர் பாலுமகேந்திர முதல் பிரதியை வெளியிட, தமிழ்க் குலம் தழைக்க தன்னையே எரித்துக் கொண்ட தியாகச் சுடர் முத்துக் குமரனின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார்.


பின்னர் பேசிய சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.


’’இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை... ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது.



காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே... யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல... என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்... புலிகள்தான்!


கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது.


பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அனுப்பியுள்ளார்கள். இத்தாலி சோனியாவை பாரதத்தின் அன்னை என்று அழைக்கும்போது, என் சொந்த ரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன்.


சர்வாதிகாரி, சகோதரயுத்தம் செய்தவன், பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறான், தன் புகழை வளர்க்க சண்டை போடுகிறான்.... இப்படி அவரைப் பற்றி எத்தனை அவதூறுகள்... பொய் பழிகள். ஆனால் அத்தனையையும் பிரபாகரன் எனும் பெரு நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிடும் என்பதை இவர்களுக்கு காலம் புரியவைக்கும்.


நான் உணர்ச்சிவசப்படுவதாகக் கூறினார்கள். எனக்கு உணர்ச்சி இருக்கு, வசப்பட்டு பேசறேன். பிரபாகரன் நாடு கேட்டது அவருக்காகவா... உனக்கும் எனக்கும்... இந்த ஒட்டுமொத்த தமிழினத்துக்குமல்லவா... இறையாண்மை பற்றிப் பேசுகிறோமே... தவிச்ச வாய்க்கு பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணி தருகிறானா இந்த நாட்டிலே... எங்கே இருக்கிறது உனக்கான உரிமை?


தமிழகக் கடலில் மீன் பிடிக்க தமிழனுக்கு உரிமை இல்லை. எங்கள் மீனவனுக்கு சொந்தமான கச்சத்தீவை யாரைக் கேட்டு தாரைவார்த்துக் கொடுத்தீர்கள்? 430 தமிழ் மீனவனை சுட்டுக் கொன்றுள்ளனர் சிங்களர்கள். அதை ஏன் என்று கேட்க நாதியில்லை... அப்புறம் எங்கே வந்தது இறையாண்மை? எனக்கு இறைவனுமில்லை... இறையாண்மையுமில்லை.


தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்.... சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க...


அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேல் என்பதை நம்புபவர்கள் நாங்கள். 'மதுக்கடையிலும், திரையரங்க வாசல்களிலும் கூட்டம் கூட்டமாய் நின்று உணர்வை இழந்து கொண்டிருக்கும் என் சகோதரர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லையே' என என்னிடம் வருத்தப்பட்டுக் கூறினார் அண்ணன் பிரபாகரன்.


கடலுக்கு அப்பால் உள்ள தமிழனும் சாகிறான்... இந்தப் பக்கம் உள்ள தமிழனும் சாகிறான். நாதியத்துப் போன கூட்டமாகிவிட்டோமே என்ற ஆற்றாமை என்னை பாடாய்படுத்துகிறது...


திபெத்திய தலாய்லாமாவுக்கு ஒரு நியாயம், ஈழத்துப் பிரபாகரனுக்கு ஒரு நியாயமா... பங்களாதேஷைப் பிரித்துக் கொடுக்க ஒரு நியாயம், தனி ஈழம் உருவாவதைத் தடுக்க ஒரு நியாயமா...


10 ஆண்டுகள் போராடி 3000 உயிர்களை இழந்த கொசோவோ இன்று தனிநாடு. ஆனால் அரை நூற்றாண்டுப் போர்... லட்சத்தில் உயிர்களை இழந்த ஒரு நாட்டை தனி நாடு என அங்கீகரிக்க ஏன் தயக்கம்... நண்பர்களே... பிரபாகரன் வேறு நாட்டை பிரித்துக் கேட்கவில்லை. காலகாலமாக, நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் பண்டார வன்னியன் காலத்திலிருந்து அரசாண்டு வந்த தன் சொந்த மண்ணை அந்நியர்களிடம் இழந்துவிடாமலிருக்கப் போராடுகிறான்.


இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது... ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், ராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து... என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ்.


அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும்... நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார் சீமான்.

நன்றி நக்கீரன்

2 Comments:

ttpian said...

இந்திய ராணுவம்,இலங்கையின் கூலிப்படை!
உதைத்ததில் தவறு கிடையாது!

ஊர்சுற்றி said...

சீமானின் பேச்சைக் கேட்டு பலருக்கு உணர்வு வர வாழ்த்துக்கள்.

சீமான் வாழ்க.