Thursday, May 28, 2009

இலங்கை போர் குற்றங்கள்: விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையம் கோரிக்கை

இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா சபையில் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவிநீதம் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் போரினால் இடம் பெயர்ந்து அகதிகளாக அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சந்தித்து வரும் மனித உரிமை பாதிப்புகள் குறித்து விவாதிக்க ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடக்கிறது.


இந்த அமைப்பில் உள்ள 47 நாடுகளில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய 17 நாடுகள் விடுத்த கோரிக்கையின் பேரில் இக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இந்த நாடுகள் சார்பில் ஸ்விட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.


அதில், இலங்கையில் இடம் பெயர்ந்து அரசு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.


இதையடுத்து மனித உரிமை ஆணையக் கூட்டம் அவரசமாகக் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய நவிநீதம் பிள்ளை, இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் செய்த போர் குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.


இலங்கை அரசும், புலிகளும் அப்பாவி மக்கள் மீது ஏராளமான கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டனர் என்பதை மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன. இதனால் இது குறித்து சர்வதேச சமுதாயம் முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

போர் என்ற பெயரில் டிசம்பர் மாதம் முதல் நடந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


இடம் பெயர்ந்து வாழும் 3 லட்சம் தமிழர்களை எந்த அடிப்படை வசதியும் இல்லாமலம முகாம்களில் இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளது மிகப் பெரிய கொடுமை.

அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை உடனே அனுமதிக்க வேண்டும் என்றார்.

0 Comments: